பாலியல் ரீதியாக 15 வயது சிறுமியைத் துன்புறுத்தியக் குற்றத்திற்காக முன்னாள் நடிகர் இயன் ஃபாங் என அறியப்பட்ட ஃபாங் வேய் ஜியேக்கு 40 மாதச் சிறைத் தண்டனை திங்கட்கிழமை (மே 19) விதிக்கப்பட்டது.
35 வயதான ஃபாங், தன்மீது சுமத்தப்பட்ட மூன்று பாலியல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்பட்டபோது, 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, நீதிமன்ற விசாரணையில் குறுக்கிட்டது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவர் தனது தண்டனையை ஜூன் 16ஆம் தேதி முதல் அனுபவிக்கத் தொடங்குவார் எனக் கூறப்பட்டது.
குற்றம் நடந்தபோது அப்பெண்ணின் வயது 15. அதனால், பாதிக்கப்பட்டவரின் விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.
மேலும், குற்றவாளியின் விவரங்களை வெளியிடுவதற்கு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு மனுத் தாக்கல் செய்திருந்தது. அதனையடுத்து ஃபாங்கின் விவரங்கள் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒன்பது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அச்சிறுமியை ஃபாங் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் தெரிவிக்கப்பட்டது.