வேறு யாருக்கோ அனுப்பப்பட்டிருக்க வேண்டிய குறுஞ்செய்தி, பதின்ம வயதினர் இருவரை ஒன்றுசேர்த்தது.
இவ்விருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இந்த இணையர் பிரிந்தனர்.
சில ஆண்டுகள் கழித்து, சிங்கப்பூரிலிருந்து 11,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு நகரில் தற்செயலாக இவர்கள் மீண்டும் சந்திக்க நேரிட்டது.
தாம் முதன்முறையாக காதலை வெளிப்படுத்திய ஒன்பது ஆண்டுகள் கழித்து, காதலி நுரய்னி மாலிக்கின் கைவிரலில் மீண்டும் நீலக்கல் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தார் திமத்தி ஆனந்த் வீரசேகர.
இது ஹாலிவுட் திரைப்பட வசனம் கிடையாது. திமத்தி-நுரய்னி இணையரின் காதல் கதை இது. இப்போது இந்த இணையர் 30களில் உள்ளனர்.
தாம் பயின்ற ஆங்கிலோ-சீன தொடக்கக் கல்லூரிக்கு 2006ல் சென்றபோது நுரய்னியை திமத்தி சந்தித்தார்.
அப்போது தொடக்கக் கல்லூரியின் முதலாமாண்டு படிப்பை நுரய்னி நிறைவுசெய்தார். திமத்தி தேசிய சேவை ஆற்றிக்கொண்டிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட பள்ளிப் பயணத்தின்போது இவ்விருவரும் சந்தித்து இருந்தனர். ஆனால், நுரய்னியின் பெயரை திமத்தி நினைவில் வைத்திருக்கவில்லை.
“நமது திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும், அல்லவா? என்று நுரய்னி கேட்டபோது திமத்திக்கு ஒரே ஆச்சரியம்.
நுரய்னிக்கு தாம் தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பியது திமத்திக்கு அப்போதுதான் தெரியவந்தது.
“அவரது பெயரையும் வேறொருவரின் பெயரையும் எனது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது,” என்று திமத்தி கூறினார்.
ஆனால், வேறொருவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டோம் என்ற காரணத்தால் தமது திட்டத்தைக் கைவிட திமத்திக்கு மனமில்லை.
பள்ளி வரவேற்பு நிகழ்ச்சியில் திமத்தியும் நுரய்னியும் கலந்துகொண்டனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஏழாண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். 2013 புத்தாண்டு நாளில் திமத்தி முறைப்படி நுரய்னியிடம் தமது காதலை வெளிப்படுத்தி, “என்னை திருமணம் செய்துகொள்வாயா?” என்று கேட்டார்.
அதற்கு நுரய்னி சம்மதம் தெரிவித்தார்.
அப்போது பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்த திமத்தி, “எனது முதல் சம்பளத்தைப் பயன்படுத்தி அவருக்கு நிச்சயதார்த்த மோதிரம் வாங்கினேன்,” என்றார்.
அப்போது ஆலோசகராக நுரய்னி தமது வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கினார். பணி நிமித்தமாக ஆறு மாதங்கள் அவர் லண்டன், ஷாங்காய் நகர்களுக்குச் சென்றார்.
“சிங்கப்பூர் அல்லாமல் நான் மற்ற நாடுகளில் வசிக்க விரும்பினேன்,” என்றார் நுரய்னி.
திருமணம் செய்துகொள்ளவோ குழந்தை பெற்றுக்கொள்ளவோ நுரய்னி விரும்பவில்லை என்று திமத்தி கூறினார்.
திமத்தியோ சிங்கப்பூரிலேயே இருந்து இங்கு எதிர்காலத்தை உருவாக்க விரும்பினார்.
“ஒன்றாகச் சேர்ந்து எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு அப்போது இல்லை. ஒருவழியாக, நாங்கள் பிரிந்து செல்வதற்கான கடினமான முடிவை எடுத்துவிட்டோம்,” என்று திமத்தி கூறினார்.
2014ல் இந்தியாவுக்கு வர்த்தகப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு விமான நிலையத்தில் நிச்சயதார்த்த மோதிரத்தை திமத்தியிடம் கொடுத்துவிட்டார் நுரய்னி.
“எனக்காக வைத்துக்கொள் என்றார் அவர். ஆனால், என்னிடம் அதைத் திரும்பத் தந்துவிடுவதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை,” என்றார் திமத்தி.
மனமுடைந்துபோன திமத்தி, “இறைவனே, நான் உன்னிடம் விட்டுவிடுகிறேன். எங்களை மீண்டும் சேர்த்து வைக்க அப்படி ஒருநாள் இருந்தால், அது உன் கையில்தான் உள்ளது,” என்று திமத்தி சொன்னார்.
இவர்கள் வெறும் நண்பர்களாக இருக்க முற்பட்டனர்.
ஆனால், சில மாதங்கள் கழித்து, வெறும் பெயருக்காக தொடர்பில் இருப்பதில் அர்த்தமில்லை என்பதை இருவரும் உணர்ந்தனர். உணர்வுபூர்வமாக இவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
எனவே, தொடர்பை நிறுத்திக்கொள்ள இவர்கள் முடிவெடுத்தனர்.
பின்னர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா முழுவதும் திமத்தி பயணம் செய்வது குறித்த சமூக ஊடகப் பதிவுகளை நுரய்னி கண்டார்.
“சிங்கப்பூரில்தான் இருக்க விரும்புவதாக இவர் (திமத்தி) என்னிடம் கூறியிருந்தார்,” என்றார் நுரய்னி.
“காதல் வாழ்க்கையிலிருந்து பிரிந்து வெறும் நண்பர்களாக இருப்பது மிகவும் சிரமம் என்பதை உணர்ந்தேன். எனவே, வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் என அனைத்துத் தளங்களிலும் திமத்தியை நான் ஒதுக்கிவிட்டேன்," என்று கூறிய நுரய்னிக்கு, திமத்தி வேறு வேலைக்கு மாறிவிட்டது பற்றி அப்போது தெரியாது.
இருவரும் பிரிந்து மூன்றாண்டுகள் கழித்து, பணி நிமித்தமாக திமத்தி லண்டனுக்குச் செல்லவிருந்தார்.
அவர் பயணப்பெட்டியைத் தயார்செய்து கொண்டிருந்தபோது, தம் தாயாரிடம், “லண்டனில் ஒருவரைச் சந்திக்கப் போகிறேன் என என் மனம் சொல்கிறது. உங்களுக்குத் தெரியும் எவரைப் பற்றி சொல்கிறேன், என்று திமத்தி கூறினார்.
வேலைக்காக நுரய்னி லண்டக்குப் புலம்பெயர்ந்ததாக தேவாலய நண்பர்கள் திமத்தியிடம் சொல்லியிருந்தனர்.
சிங்கப்பூரைவிட 2.2 மடங்கு பெரிதாக உள்ள லண்டனில் நுரய்னியை சந்திப்பதற்கான சாத்தியம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்பதை திமத்தி அறிந்திருந்தார். அவரைச் சந்திக்கும் எண்ணமும் திமத்திக்கு இல்லை.
ஆனால், விமானத்தில் அமர்ந்த திமத்திக்கு, நுரய்னியைச் சந்திக்கப் போகிறோம் என அவரது மனம் சொல்லியது.