தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியின் தானியங்கிப் பண இயந்திரத்திலிருந்து கள்ளப் பணத்தை எடுத்த ஆடவருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் அட்டைகள், பேநவ் கியூஆர் குறியீடுகள் மூலம் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க வகைசெய்யும் ஷெங் சியோங் பேரங்காடி இயந்திரங்களிலிருந்து 24 வயது முகமது இஸ் இர்யான் மொட் அலி கள்ளப் பணத்தை எடுக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.
பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறிய இஸ், கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, ஏழு ஷெங் சியோங் பேரங்காடிகளுக்குச் சென்று அவற்றின் பண இயந்திரங்களிலிருந்து $20,300 ரொக்கத்தை எடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க முயன்றபோது இஸ்சின் நடவடிக்கையைப் பேரங்காடியின் நிர்வாகி அறிந்துகொண்டார்.
பேநவ் மூலம் பணம் எடுக்க முயன்ற இஸ்சின்மீது சந்தேகப்பட்ட நிர்வாகி அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ் கைதுசெய்யப்பட்டார்.
பெயர் குறிப்பிடப்படாத 47 வயது பெண்ணுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிலிருந்து இஸ் பணம் எடுத்தது விசாரணையில் தெரியவந்தது. 11 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் மூலம் பெறப்பட்ட பணத்தை இஸ் இயந்திரத்திலிருந்து எடுக்க முயன்றார்.


