சிங்கப்பூருக்குள் யானைத் தந்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்த கப்பல் ஊழியருக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது
முன் அனுமதி பெறாமல் யானைத் தந்தத்தை வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதை அறிந்தும் தெர்மோஸ் பிளாஸ்கிற்குள் மறைத்து அதனை அவர் கடத்த முயற்சி செய்தார்.
சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் கெப்பல் நுழைவாயில் வழியாகச் சிங்கப்பூருக்குள் நுழைந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த 30 வயது ஹஃபிலுதினின் உடைமைகளை அதிகாரிகள் சோதனைசெய்தனர். அப்போது அவரிடம் யானைத் தந்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
செப்டம்பர் 10 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில் ஹபிலுதினுக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டிசம்பர் 2025-இல் நைஜீரியாவின் லாகோஸில் கப்பல் நின்றுகொண்டிருந்தபோது, ஒரு வீதி வியாபாரியிடமிருந்து ஹபிலுதின் இந்த ஆப்பிரிக்க யானைத் தந்தத்தை 150 அமெரிக்க டாலருக்கு (S$190) வாங்கியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் லிம் சோங் ஹுய் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்தத் தந்தம், ஆபத்தான உயிரினங்கள் (இறக்குமதி, ஏற்றுமதி) சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட ஒரு பொருள் என்று வழக்கறிஞர் சொன்னார்.
அதைச் சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யத் தேவையான எந்தவொரு அனுமதியோ அல்லது உரிமமோ ஹபிலுதினிடம் இல்லை. சிங்கப்பூரின் சட்டங்களை அறிந்திருந்ததால், அவர் அந்தத் தந்தத்தை தெர்மோஸ் பிளாஸ்க்கிற்குள் மறைத்து வைக்க முடிவு செய்தார்.
ஏறக்குறைய 27 செ.மீ நீளமும் 550 கிராம் எடையும் கொண்ட அந்தத் தந்தத்தை வைப்பதற்காக, அவர் பிளாஸ்க்கின் ஒரு பகுதியை மாற்றியமைத்தார். பின்னர் அந்தப் பிளாஸ்க்கை தனது பயணப் பையில் வைத்தார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி கப்பல் தனது சொந்த நாடான இந்தோனீசியாவிற்குத் திரும்புவதற்கு முன்பாக அதன் கடைசி நிறுத்தமான சிங்கப்பூர் கடற்பகுதிக்குள் நுழைந்தது. மறுநாள் மதியம் 12.15 மணியளவில், அவர் தனது உடைமைகளுடன் ஐசிஏ கெப்பல் வாயிலில் கப்பலிலிருந்து கீழே இறங்கினார்.
பாதுகாப்புச் சோதனையின் ஒரு பகுதியாக அவரது பயணப் பை வழக்கமான ஊடுகதிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பிளாஸ்க்கிற்குள் இருந்த தந்தத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தப் பிறகு, அது புகையிலை பிடிக்கப் பயன்படும் பிளாஸ்டிக்கால் ஆன ‘சுருட்டு வடிவ சாதனம்’ என்று ஹபிலுதின் பொய் கூறினார்.
இந்த வழக்கு தேசிய பூங்காக் கழத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

