பயன்படுத்தப்பட்ட பொருள்களை விற்கும் கடை ஒன்றின் உரிமையாளர் ஐவரிடமிருந்து கிட்டத்தட்ட 140,000 வெள்ளியைக் களவாடியிருக்கிறார்.
குற்றவாளியான 36 வயது ரிங்கா துவீ ரிஸ்கி இரியாந்தோ ஓயுஇ டவுன்டெளன் கேலரி கடைத்தொகுதியில் வெஸ்ட் குளோசட் எனும் கடையை நடத்திவந்தார். தான் களவாடிய தொகையில் 41,000 வெள்ளியை அவர் தற்போது திருப்பித் தந்துவிட்டார்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் வழக்கில் விசாரணை நடத்திய அதிகாரி மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இழப்பீடாக 91,950 வெள்ளியை வழங்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
அந்தத் தொகையைச் செலுத்தாவிட்டால் ரிங்கா மேலும் 24 நாள்களுக்குச் சிறையில் இருக்கவேண்டியிருக்கும்.
பாதிக்கப்பட்டோரில் மூவரில் ஒவ்வொருவருக்கும் சட்டவிரோதமான முறையில் நம்பிக்கை துரோகம் இழைத்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ரிங்கா ஒப்புக்கொண்டார். அவற்றில் மொத்தம் 108,000 வெள்ளித் தொகை சம்பந்தப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட எஞ்சிய இருவர் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அவற்றில் சம்பந்தப்பட்ட தொகையும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில்கொள்ளப்பட்டன.
வெஸ்ட் குளோசட், அதன் சேவைகளை கரூசல் மின்வர்த்தகத் தளத்திலும் இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களிலும் விளம்பரம் செய்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.


