இவ்வாண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே மலர்ந்த இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள் நிறப் பூங்கொத்துகள் சிங்கப்பூர் வீதிகளுக்குப் புத்துயிர் அளித்துள்ளன.
ஜனவரி மாத இறுதியில் நிலவிய வறண்ட வானிலைக்குப் பிறகு, பிப்ரவரியில் தாராளமாக மழை பெய்தது. அதன் காரணமாக, இந்த வெப்பமண்டலத் தீவில் உள்ள 4,800க்கும் மேற்பட்ட உள்நாட்டு, பயிரிடப்பட்ட தாவரங்கள் மலரத் தொடங்கின.
வழக்கமாகச் சிங்கப்பூரில் உள்ள பூக்கும் மரங்கள் மார்ச் முதல் ஏப்ரல் வரையிலும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலும் இரண்டு காலகட்டங்களில் மட்டுமே பூக்கும்.
இருப்பினும், இவ்வாண்டு வழக்கத்திற்கு மாறாக, அது முன்னதாகவே நடந்திருப்பதாகத் தேசியப் பூங்காக் கழகத்தின் தெருக்காட்சிப் பிரிவுக்கான குழு இயக்குநர் ஓ சியோவ் ஷெங் கூறினார்.
“அண்மைய வாரங்களைப் போல வெப்பமான, நீண்டகால வறண்ட வானிலைக்குப் பிறகு கனமழை பெய்யும்போது பொதுவாக மலர்ச்சி தூண்டப்படுகிறது,” என்று திரு ஓ கூறினார்.
‘ட்ரம்பெட்’ மரங்களின் மலர்கள் (Tabebuia rosea) இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில் வீதிகளை அலங்கரிக்கின்றன. இவை ஜப்பானின் ‘சக்குரா’ மரங்களைப் போல் காட்சியளிப்பதால், சிங்கப்பூரின் ‘செர்ரி ப்ளாசம்’ என்று அன்புடன் அழைக்கப்படுகின்றன.
அந்த மரம், கிட்டத்தட்ட18 மீட்டர்முதல் 35 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. அந்த மலர்கள் சில நாள்களுக்கு மட்டுமே மலர்ந்திருந்து பின்னர் வாடிப்போகும். ஆனால், அதற்கு முன்னர், மரத்தைச் சுற்றிய பகுதி வண்ணமயமாகக் காட்சியளிக்கும்.
இதற்கிடையே, சிங்கப்பூர் முழுவதும் ஆண்டுதோறும் சிலமுறை பூக்கிறது, ‘யெல்லோ சராக்கா’ (Saraca thaipingensis) மரம்.
தொடர்புடைய செய்திகள்
அந்த மரம் 24 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. அதன் அடர்த்தியான, அழகான மஞ்சள் நிறப் பூக்கள் பின்னர் ஆரஞ்சு, சிவப்பு நிறங்களாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டது.

