தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றால் இலவசமாகக் கல்வி, பள்ளியில் உணவு, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்குப் போராடுவோம் என்று சீர்திருத்த மக்கள் கூட்டணியின் (பிஏஆர்) தலைமைச் செயலாளர் லிம் தியென் சனிக்கிழமை (ஏப்ரல் 26) கூறினார்.
அதன் மூலம் மிக மோசமாக இருப்பதாகக் கூறப்படும் சிங்கப்பூரின் 0.97 என்ற பிறப்பு விகிதத்தை மேம்படுத்த முடியும் என்று டெளனர் ரோட்டில் உள்ள நார்த்லைட் பள்ளியில் நடந்த அக்கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திரு லிம் குறிப்பிட்டார்.
குடிமக்களை மேலும் வரி செலுத்த வைக்காமலும் காப்புநிதியைப் பயன்படுத்தாமலும் இத்தகைய இலவசத் திட்டங்களை வழங்கலாம் என்றும் அவர் சொன்னார். சிங்கப்பூரர்களின் மத்தியச் சேமநிதிப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அரசாங்கம் ஈட்டும் வட்டியைப் பயன்படுத்துவதன் மூலம் அது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.
அரசாங்கத் துறையில் தாம் ‘தேவையற்ற செலவுகளை’ குறைக்கப்போவதாகவும் அவர் கூறினார். அந்த வகையில், அரசாங்கத் துறையில் தேவைக்கும் அதிகமான ‘வளங்கள்’ இருப்பதாக அவர் சாடினார்.
இலவசக் கல்வி, பள்ளியில் உணவு, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவது போன்றவற்றால் கூடுதலாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கலாம் என்றும் அதன்வழி சிங்கப்பூர், வெளிநாட்டவரை நம்பியிருப்பதைக் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் திரு லிம் விளக்கினார்.

