வியட்னாம் செல்லவிருக்கும் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி. வியட்னாம் தேசிய விமான நிறுவனம் செய்துகொண்ட புதிய பயணப் பகிர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வியட்னாமிற்கு செல்லவிருப்பவர்களுக்குக் கூடுதல் விமானச் சேவைத் தெரிவுகள் வழங்கப்படும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், வியட்னாம் ஏர்லைன்சுடன் பயணப் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர் 26ம் தேதிமுதல் இது நடைமுறைக்கு வருகிறது.
செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில், சிங்கப்பூருக்கும், வியட்னாமுக்கும் இடையே வியட்னாமின் விமானப் பாதைகளைச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பகிர்ந்துகொள்ளும் என அவ்விரு விமான நிறுவனங்களும் கூறின.
சிங்கப்பூருக்கும், டா நாங், ஹனோய், ஹோ சி மின் ஆகிய நகரங்களுக்கும் இடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்கும் விமானப் பாதைகளில் வியட்னாம் ஏர்லைன்ஸ் பயணப் பகிர்வு முறையில் சேவையைப் பகிர்ந்து கொள்ளும். அனைத்து விமானங்களும் ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று அவை மேலும் தெரிவித்தன.
இந்தப் பயண பகிர்வுமூலம் விமானங்கள் அக்டோபர் 10 முதல் படிப்படியாகத் தங்கள் விற்பனைத் தளங்கள், பயண முகவர்கள் ஆகியவை வழியாகப் பயணச் சீட்டுகளை விற்பனை செய்யலாம்.
இரு விமான நிறுவனங்களும் தங்கள் கட்டமைப்பில் உள்ள மற்ற இடங்களைப் பயண பகிர்வு உடன்பாட்டில் சேர்ப்பது குறித்து ஆராயும்.
வியட்னாம் ஏர்லைன்ஸ் பெருநிறுவனத்தின் திட்டமிடல், மேம்பாட்டு இயக்குநர் நுயென் குவாங் ட்ரூங், இந்த ஒத்துழைப்பு இரு விமான நிறுவனங்களின் விரிவான பாதை கட்டமைப்புகள், முதன்மை சேவைகள் பயணிகளுக்கு அதிக இணைப்பு, நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது என்றார்.
“இது எங்கள் நாடுகளில் பொருளியல் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறையையும் ஆதரிக்கும். மேலும் சிங்கப்பூர் வியட்னாம் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும்” என்றார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் திட்டமிடல் பிரிவின் மூத்த துணைத் தலைவர் டாய் ஹாயு.