கோலாலம்பூரில் இருந்து புதன்கிழமை (ஏப்ரல் 26) இரவு புறப்பட்டு சிங்கப்பூர் வரவிருந்த பயணிகள், கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே பல மணி நேரம் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அவர்கள் பயணம் செய்யவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) எஸ்கியூ125 விமானத்தில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதே அதற்குக் காரணம்.
அந்த விமானம், 159 பயணிகள், 13 ஊழியர்களுடன் கோலாலம்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு சிங்கப்பூருக்கு இரவு 9.50 மணிக்கு வந்து தரையிறங்க இருந்தது.
விமானம் தரையில் இருந்தபோதே அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்று எஸ்ஐஏ பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
பிறகு விமானம் நிற்கும் இடத்திற்குத் திரும்பி அனைத்து பயணிகளும் சிப்பந்திகளும் அதிலிருந்து வெளியேறினர்.
விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினையைச் சரிசெய்ய அதிக நேரம் தேவைப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளை வேறு விமானத்திற்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது.
ஆனாலும் அந்த யோசனை பிறகு ஒழுங்குமுறை காரணங்களுக்காக கைவிடப்பட்டது.
விமானச் சேவை ரத்தானதால் ஏற்பட்ட சங்கடங்களுக்காக தான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக எஸ்ஐஏ தெரிவித்தது.
பயணிகள் வியாழக்கிழமை கோலாலம்பூரில் இருந்து வேறு விமானங்களில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டனர்.