மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்று புறப்படுவதில் ஆறு மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.
அந்த விமானம் சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்தது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நிகழ்ந்தது.
தரையிறங்கும்போது விமானத்தின் சக்கரத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது.
அவ்விமானம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டியிருந்தது. ஆனால், 143 பயணிகளும் எட்டு சிப்பந்திகளும் இருந்த அந்த விமானம் இரவு 8.27 மணிக்குத்தான் புறப்பட்டதாக எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்குப் பதிலளித்தார்.
அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.38 மணிக்கு சிங்கப்பூர் வந்தடைந்தது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கிய பிறகு அதன் சக்கரத்தில் காற்றில்லாமல் போனதாக அந்த எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார். விமானத்தைத் தனிப்பட்ட விமான நிறுத்துமிடத்துக்குக் கொண்டுசென்றபோது அதில் இருந்த அனைவரும் இறங்கி விமான நிலையப் பேருந்துச் சேவையில் முனையத்துக்குப் போனதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒன்பது நாள்களில் இரண்டாவது முறையாக கோலாலம்பூர் சென்றுவரும் எஸ்ஐஏ விமானம் ஒன்று சக்கரப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கிறது.

