ஜப்பானை நோக்கி ‘எம்ஃபில்’ புயல் விரைகிறது.
இதன் காரணமாக சிங்கப்பூருக்கும் ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்கும் இடையிலான சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பயண நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க அவர்களுடன் தொடர்புகொள்ள இருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை அது வெளியிடவில்லை.
பாதிக்கப்பட்ட விமானச் சேவைகள், மாற்றியமைக்கப்பட்ட பயண நேரம் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள சிங்கப்பூர் ஏர்லைன்சின் இணையப்பக்கத்தை நாடலாம்.
பயண முகவர்கள் மூலம் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டோர் அந்தந்த முகவர்களுடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
“வேறு விமானங்களில் செல்லவோ அல்லது பயன்படுத்தப்படாத பயணச் சீட்டுக்கான தொகையை முழுமையாகத் திரும்ப பெற்றுக்கொள்ளவோ வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கலாம்.
“வாடிக்கையாளர்கள், விமானச் சிப்பந்திகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருகிறோம். நிலைமையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்து மிகவும் அணுக்கமாகக் கண்காணிக்கும். தேவை ஏற்பட்டால் மாற்றங்கள் செய்யப்படும்,” என்று சிங்கப்பூர் ஏர்லைன்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.