சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) உயர்ரக ஓய்விடங்கள் (premium lounges) 45 மில்லியன் வெள்ளி செலவில் மெருகேற்றப்படவுள்ளன.
இரண்டு ஆண்டுகளில் கட்டம் கட்டமாக அந்தப் புதுப்பிப்பு பணி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதுப்பிப்பு பணிகள் முடிந்த பிறகு தற்போது உள்ள இடமும் இருக்கையையும் விடக் கூடுதல் இடமும் இருக்கையும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அதில் மேம்பட்ட வசதிகளும் உணவு மற்றும் பானங்களுக்கான தெரிவுகள் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
உயர்ரக ஓய்விடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் முதல் வகுப்பு, பிசினஸ் பிரிவு பயணிகளுக்கானது.
முதல் வகுப்பு ‘சில்வர் கிரிஸ்’ ஓய்விடத்தின் கட்டுமானம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) தொடங்கியது. அது இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் பிஸ்னஸ் பிரிவுக்கான ‘சில்வர் கிரிஸ்’ ஓய்விடத்தின் கட்டுமானம் இவ்வாண்டு இறுதியில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘கிரிஸ் பிளையர் கோல்ட்’ ஓய்விடத்தின் கட்டுமானப் பணி தொடங்கும். கட்டுமானம் மற்றும் புதுப்பிப்புப் பணிகள் அனைத்தும் 2027ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் முடிக்கப்படும்.
முதல் வகுப்பு ‘சில்வர் கிரிஸ்’ ஓய்விடத்தில் உயரமான கூரைகள், அழகிய சன்னல்கள், மதுக்கூடம் போன்றவை இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அதில் பல உணவுத் தெரிவுகள், உடனடியாகச் சமைத்து தரும் சேவை போன்றவையும் இருக்கும். ஓய்விடத்தில் உள்ள இருக்கைகள் நல்ல வசதியுடன் இருக்கும். அங்கு பயணிகள் தங்களுடைய தேவைகள் அனைத்தையும் எளிதாகப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
‘கிரிஸ் பிளையர் கோல்ட்’ பகுதியில் தற்போது 160 இருக்கைகள் உள்ளன. அவை இரண்டு மடங்காகக் கூட்டப்படவுள்ளன. மேலும் அங்குக் குளியல் அறைகள் உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.
2019ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாங்கி விமான நிலையத்தில் உள்ள முனையம் மூன்றில் ஓய்விடங்களை 50 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பித்தது.

