ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்த XWB-84 இயந்திரங்களை சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) A350-900 வகை விமானங்களில் பயன்படுத்துகிறது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோல்ஸ் ராய்ஸ் இயந்திரங்களைச் சோதனை செய்துவருவதாக எஸ்ஐஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அண்மையில் கேத்தே பசிபிக் ஏர்வேஸ் (A350-1000) விமானத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் இயந்திரத்தின் ஒரு பாகம் செயலிழந்தது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனம் அதன் விமானங்களில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் இயந்திரங்களைச் சோதனை செய்தது.
அதில் 15 விமானங்களில் உள்ள இயந்திரங்களின் பாகங்களை மாற்ற வேண்டும் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது எஸ்ஐஏ நடவடிக்கை எடுத்துள்ளது.
A350-900 விமானங்களைச் சோதிப்பதால் எஸ்ஐஏ விமாங்களின் சேவைகளில் இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மறுபக்கம் கேத்தே பசிபிக் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. தற்போது மூன்று விமானங்களுக்கு இயந்திர பாகங்கள் மாற்றப்பட்டுள்ளன. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் கேத்தே பசிபிக் அதன் வழக்கமான விமானச் சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A350-900 விமானங்களைப் பயன்படுத்தும் மற்ற விமான நிறுவனங்கள் ரோல்ஸ் ராய்ஸ் இயந்திர பாக மாற்றம் குறித்து அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
ரோல்ஸ் ராய்ஸ் இயந்திரங்களைப் பல முன்னணி விமான நிறுவனங்கள் பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.