சிங்கப்பூரின் காற்றுத் தரம் புதன்கிழமை (செப்டம்பர் 16) அதிகாலையில் தொடர்ந்து மேம்பட்டு வந்தது.
நாட்டின் ஐந்து வட்டாரங்களில் நான்கு வட்டாரங்களின் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மிதமான வரம்புக்குத் திரும்பியது.
செப்டம்பர் 16ஆம் தேதி காலை 6 மணி நிலவரப்படி, மத்திய வட்டாரத்தின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 103ஆகப் பதிவானது; இது ஆரோக்கியமற்ற வரம்பைக் குறிக்கிறது.
அதே வேளையில், தீவின் கிழக்குப் பகுதியில் 87ஆகவும் மேற்குப் பகுதிகளில் 86ஆகவும் வடக்கில் 78ஆகவும் தெற்கில் 76ஆகவும் குறியீடு பதிவாகியிருந்தது.
தேசியச் சுற்றுப்புற வாரிய இணையத்தளத் தகவல்களின்படி, தாம்சன், மேரிமவுண்ட், சின் மிங், அங் மோ கியோ, பீஷான், சிராங்கூன் கார்டன்ஸ், மெக்ரிச்சி, தோ பாயோ ஆகிய பகுதிகள் மத்திய வட்டாரத்தில் அடங்கும்.
அதற்கு முந்தைய நாளின் நிலவரத்தோடு ஒப்பிடுகையில் செப்டம்பர் 16ஆம் தேதி அதிகாலையில் பதிவான நாட்டின் காற்றுத் தூய்மைகேட்டுக் குறியீடு ஆகப் பெரிய மாற்றம் காண்டது.
செப்டம்பர் 15ஆம் தேதி, நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருந்தது.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இத்தகைய நிலை ஏற்பட்டது இதுவே முதன்முறையாகும்.
