சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA), இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 59 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (ஜூலை 28) நிறுவனம் இத்தகவலை வெளியிட்டது.
வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்ததும் இணை நிறுவனங்கள் சந்தித்த இழப்பும் இதற்குக் காரணம் என்று ‘எஸ்ஐஏ’ கூறியது.
ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த, 2025/2026ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் நிகர லாபம் $186 மில்லியனாகப் பதிவானதாக அது குறிப்பிட்டது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் அது $452 மில்லியனாக இருந்தது.
‘ஏர் இந்தியா’ நிறுவனம் சந்தித்த இழப்பு, அண்மைய நிகர லாபம் வீழ்ச்சி கண்டதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்திற்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் நிதி விவரங்களில் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் விவரங்கள் இடம்பெறவில்லை. ‘விஸ்தாரா’ நிறுவனமும் ‘ஏர் இந்தியா’ நிறுவனமும் ஒருங்கிணைக்கப்பட்டதை அடுத்து, 2024 டிசம்பர் மாதத்திலிருந்துதான் ‘ஏர் இந்தியா’வின் நிதி நிலை விவரங்கள் இதில் சேர்க்கப்பட்டன.
இணைப்பைத் தொடர்ந்து, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தில் ‘எஸ்ஐஏ’ நிறுவனத்துக்குச் சொந்தமான பங்குகளின் விகிதம் 25.1 விழுக்காடாகும்.
ஆண்டு அடிப்படையில், சிங்கப்பூர் ஏர்லைன்சின் லாபம் ஏறக்குறைய 14 விழுக்காடு குறைந்து $405 மில்லியனாகப் பதிவானபோதும் குழுமத்தின் வருவாய் கடந்த காலாண்டில் 1.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.