சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் வால் பகுதி சேதமடைந்ததாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 24ஆம் தேதி, மணிலாவிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்த SQ917 விமானம், பலத்த காற்றால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
மாலை 6.07 மணியளவில் பலத்த காற்று காரணமாக விமானத்தைத் தரையிறக்கும் முயற்சியை விமானி, கடைசி நிமிடத்தில் கைவிட்டு மீண்டும் வானத்தை நோக்கி விமானத்தைச் செலுத்தினார். அப்போது விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் பட்டு சேதமடைந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சொன்னது.
வானத்தில் தொடர்ந்து வட்டமிட்ட விமானம் பின்னர் 6.32 மணியளவில் தரையிறக்கப்பட்டு முனையத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டது. விமானத்தில் இருந்த 256 பயணிகளுக்கும் 16 ஊழியர்களுக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
சேதமடைந்த விமானத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டது.

