சிங்கப்பூர் முதலீடுகளுக்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு

1 mins read
70f1f933-a323-4d29-bb04-2c6cc67b7444
ஆஸ்தர் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஆண்ட்ரே கோர் (நடுவில்). - படம்: ஆஸ்தர் குழுமம்

ஷெல் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையை வாங்கிய ஆஸ்தர் குழுமம் சிங்கப்பூரில் முதலீடு செய்வதற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலரை (2.6 பில்லியன் வெள்ளி) ஒதுக்கீடு செய்துள்ளது.

அந்நிறுவனம், மேலும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இலக்கைக் கொண்டுள்ளது.

இத்தகவலை ஆஸ்தர் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஆண்ட்ரே கோர் வெளியிட்டார்.

செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 11) ஏதர் ஃபியூவல்ஸ் நிறுவனத்துடன் நீடித்த நிலைத்தன்மைமிக்க விமானப் போக்குவரத்து எரிபொருள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு த பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழுக்குத் திரு கோர் பேட்டி அளித்தார்.

கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் சிங்கப்பூரையும் இந்தோனீசியாவையும் ஒருங்கிணைப்பதாக அவர் கூறினார்.

மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இந்தோனீசியாவின் சந்திரா அஸ்‌ரி, கிளென்கோர் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியே இந்த ஆஸ்தர் நிறுவனம்.

சிங்கப்பூரில் உள்ள எக்சோன்மோபைல் நிறுவனத்தில் எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களைக் கொள்முதல் செய்ய சந்திரா அஸ்‌ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் ஒப்பந்தத்தின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் புலாவ் புக்கோமில் உள்ள ஷெல் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை, கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்தர் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

குறிப்புச் சொற்கள்
ஒப்பந்தம்முதலீடுஷெல்