சோல்: வடகொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமையன்று (மே 26) பியோங்யாங்கில் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வளர்க்க அழைப்பு விடுத்ததாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுயியைச் சந்தித்து, வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்களில் நெருங்கிய அமைச்சர்நிலை ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாக, வடகொரிய அதிகாரத்துவ செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) புதன்கிழமை (மே 27) செய்தி வெளியிட்டது.
சிங்கப்பூருடனான தனது நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்த பியோங்யாங் விரும்புவதாகத் திருவாட்டி சோ கூறியதாகவும் அதே நேரத்தில் தேசிய செழிப்பை நோக்கிய வட கொரிய மக்களின் முயற்சிகளுக்கு டாக்டர் விவியன் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பியோங்யாங்கிற்குச் செல்வதற்கு முன்பு, விவியன் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து மூன்று நாள்கள் செலவிட்டார். வடகொரியாவை அடுத்து வியாழக்கிழமை அவர் தென் கொரியாவிற்குச் செல்லவிருக்கிறார்.
வியாழக்கிழமை தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இருதரப்பு ஒத்துழைப்பு, வட்டார மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள், கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தென்கொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரும் வடகொரியாவும் 2025ல் தங்களது 50 ஆண்டுகாலத் தூதரக உறவுகளைக் கொண்டாடின. நமது உறவுகள் நட்புறவானவை, பரஸ்பர மரியாதை மற்றும் பல்லாண்டுகளாகத் தொடரும் ஈடுபாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டவை.
“வடகொரிய வருகையின்போது, உச்ச மக்கள் பேரவையின் நிலைக்குழுத் தலைவர் ஜோ யோங் வோனைச் சந்தித்தேன்.
“மேலும் ஆசியான் வட்டார கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு வெளியுறவு அமைச்சர் சோயை நான் ஊக்குவித்தேன். குறிப்பாக, முன்னெப்போதையும் விட உரையாடலும் தூதரக நடவடிக்கைகளும் அதிகம் தேவைப்படும் இக்காலத்தில், வடகொரியா ஆசியான் வட்டார கருத்தரங்கின் ஒரு முக்கிய உறுப்பினராகத் தொடர்கிறது,” என்று அமைச்சர் விவியன் தமது ஃபேஸ்புக் பதில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
டோங்குக் பல்கலைக்கழகத்தின் வடகொரிய ஆய்வுக் கழகத்தின் வருகைப் பேராசிரியரான பார்க் ஆ-ரியம், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரின் பியோங்யாங் பயணம், வாஷிங்டனுடன் சாத்தியமான பேச்சுவார்த்தைகளில் வட கொரியாவின் ஆர்வத்தை மதிப்பிடும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்று முன்னதாக என்கே நியூசிடம் தெரிவித்திருந்தார்.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை மீண்டும் பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்க விரும்புவதாகவும் தங்களுக்குள் நல்லுறவு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இந்த முன்மொழிவுகளுக்கு வட கொரியா நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

