மத்திய கிழக்கில் சிக்கியுள்ளோரை மீட்டு சிங்கப்பூருக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்ட ராணுவப் பிரிவுகளையும் வீரர்களையும் அங்கீகரிக்கும் கட்டமைப்பைச் சிங்கப்பூர் ஆயுதப்படை கொண்டுள்ளது என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்களின் பங்களிப்பை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் நடைமுறை குறித்து ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டஃபர் டி சூசா கேள்வி எழுப்பினார்.
வீரர்கள் மேற்கொண்ட பணிகளைக் கண்காட்சியாகவோ பொதுக் கல்வித் திட்டங்களாகவோ உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்றும் திரு கிறிஸ்டஃபர் வினவினார்.
அதற்குப் பதிலளித்த திரு சான், சிங்கப்பூர் ஆயுதப் படை, பிற அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் வீரர்கள் தங்கள் பணிகளைச் சரிவர நிறைவேற்ற முடிந்தது என்றார்.
மத்திய கிழக்குக்குப் புறப்பட்ட விமானங்களில் சென்ற குழுவைத் தவிர பணி தொடர்பில் திட்டமிட்டவர்கள், வேவுத் துறை ஆய்வாளர்கள், கொள்கை ரீதியான ஊழியர்கள் ஆகியோரும் உள்ளனர்.
அவர்களில் சிலர் சீருடை அணியாத அதிகாரிகள் என்ற திரு சான், பாதுகாப்பான விமானப் பயணத்தைத் திட்டமிடவும் அரசதந்திர அனுமதிகளைப் பெற்றுதரவும் அவர்கள் உழைத்தனர் என்றார்.
விமானத்தில் உள்ளோரின் பாதுகாப்பையும் உடல்நலனையும் உறுதிசெய்ய ராணுவ மருத்துவக் குழு ஒன்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது என்றார் அமைச்சர் சான்.
எஸ்டி எஞ்சினியரிங் உள்ளிட்ட வர்த்தக நிறுவன ஊழியர்கள், விமானப் பராமரிப்பையும் சரக்கு நிர்வாகத்தையும் பார்த்துக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முழுநேரத் தேசியச் சேவையாளர்கள் விமானம் தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினர் என்று திரு சான் குறிப்பிட்டார்.

