சிங்கப்பூரர்களை ஈரானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றிk கொண்டுவந்ததற்காக ஓமானிய, மலேசிய அரசாங்கங்களுக்கு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஓமானின் மஸ்கட்டிலிருந்து வெளியேற சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ஓமானிய அதிகாரிகள் உதவினர்.
மற்றொரு சிங்கப்பூரர் உதவியுடன் துர்க்மெனிஸ்தான் தலைநகர் அஷ்கபாத்தைச் சென்றடைந்தார். அதன்பின்னர் மலேசிய அரசாங்கம் மலேசியர்களுடன் சேர்த்து அவரையும் அங்கிருந்து அழைத்துவந்தது.
வெளியேற்றப்பட்ட சிங்கப்பூரர்கள் அனைவரும் பத்திரமாக நாடுதிரும்பினர்.
டாக்டர் பாலகிருஷ்ணன் திங்கட்கிழமையன்று (ஜூன் 23) தமது ஃபேஸ்புக் பக்கத்தில், “ஓமானிய, மலேசிய அரசாங்கங்களின் விரைந்து உதவி, நம்முடைய நீடித்த வலிமையையும் நாடுகளின் ஒற்றுமையையும், குறிப்பாக இக்கட்டான காலத்தில் வெளிப்படுத்தியுள்ளன,” என்று பதிவிட்டுள்ளார்.
டெஹ்ரானிலும் பாக்தாத்திலும் உள்ள ஓமானியத் தூதரகங்களுக்கு டாக்டர் பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியிருக்கிறார். டெஹ்ரானிலும் அஷ்கபாத்திலும் உள்ள மலேசியத் தூதரகங்களுக்கும் விஸ்மா புத்ரா தூதரகத்துக்கும் நன்றி தெரிவித்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.