உலகளாவியப் பொருளியல், நடைமுறையில் பேரளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையிலும் வாய்ப்புகள் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க சிங்கப்பூர் கடப்பாடு கொண்டிருப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) தெரிவித்தார்.
வீடமைப்பு, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்கிறது.
குறைந்த வருமான சிங்கப்பூரர்கள் செலுத்தும் வரியில் ஒவ்வொரு வெள்ளிக்கும் அவர்களுக்கு $4 ஆதரவு வழங்கப்படுகிறது.
பொருளியல் பங்காளித்துவத்தை வலுப்படுத்தி மனிதவளத்தில் முதலீடு செய்யும் அதே நேரத்தில் நியாயமான சமுதாயத்தை உருவாக்க, சிங்கப்பூர் தொடர்ந்து செயல்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் உறுதி கூறினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கொள்கை ஆய்வுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாநாடு ஒன்றில் திரு ஹெங் உரையாற்றினார்.
ஒருவர் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேறுவதைச் சாத்தியமாக்கும் முறை சிங்கப்பூரில் தொடர்வதை அவர் குறிப்பிட்டார்.
சவால்களை எதிர்கொள்வது, மின்னிலக்கத் தடை, மாறிவரும் மக்கள்தொகை அண்மைய வரிவிதிப்புகளால் உலகப் பொருளியலில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சி கண்டு வருவது, மூப்படையும் சமூகம், சுருங்கும் ஊழியரணி ஆகியவை பற்றியும் திரு ஹெங் பேசினார்.
உலகமயமாதலில் இருந்து ஆகப் பெரிய பொருளியலான அமெரிக்கா பின்வாங்கும் நிலையில், ஊழியர்களை உலக நாடுகளிடையே பகிர்ந்து பணியமர்த்தும் முறையில் நம்பிக்கையுள்ள நாடுகளுடன் சிங்கப்பூர் இணைந்து செயல்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய பங்காளித்துவம் சிங்கப்பூரின் பொருளியலையும் சந்தைகளையும் ஒருங்கிணைக்கும் என்று குறிப்பிட்ட திரு ஹெங், இதன்மூலம் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார்.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட வர்த்தகம் மும்மடங்கு அதிகம் என்பதால் இது மிகவும் முக்கியம் என்றார் திரு ஹெங்.