காங்கோ நாட்டில் வேகமாகப் பரவிவரும் ‘இபோலா’ கிருமித்தொற்றுக்கு எதிராக ஆற்றல்மிக்க தடுப்பூசியை உருவாக்கும் பணியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஹில்லமன் லேபோரிட்டரிஸ்’ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
காங்கோவில் உருமாறிய ‘புண்டுபுக்யோ’ இபோலா கிருமித்தொற்றால் இதுவரை ஏறத்தாழ 1,500 பேர் உயிரிழந்துள்ளனர். இக்கிருமிக்கு இதுவரை தடுப்பூசியோ மருத்துவச் சிகிச்சையோ கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், ‘ஆர்விஎஸ்வி’ தளம் சார்ந்த தடுப்பூசி இதற்குச் சிறந்த தீர்வாக அமையும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முதற்கட்ட மருத்துவச் சோதனைகளுக்காகத் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஹில்மேன் நிறுவனம் இறங்கியுள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனமான ‘எம்எஸ்டி’, பிரிட்டனின் ‘வெல்கம் டிரஸ்ட்’ அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றன.
சோதனைகள் வெற்றிபெற்று அனுமதி கிடைக்கும் பட்சத்தில், குறைந்த விலையில் உலக நாடுகளுக்கு இத்தடுப்பூசி விநியோகிக்கப்படும். வழக்கமான குளிர்சாதனப் பெட்டிகளிலேயே பல மாதங்கள்வரை இந்த மருந்தைச் சேமித்து வைக்கமுடியும் என்பதால், கிராமப்புறங்களுக்கும் எளிதில் கொண்டு சேர்க்க முடியும்.
தொற்று பாதித்தவரின் உடல் திரவங்கள் வழியாகவே இபோலா கிருமி மனிதர்களுக்குப் பரவுகிறது.

