சிங்கப்பூரின் கடுமையான தரக்கட்டுப்பாடுகள் காரணமாக அந்நாட்டின் தரவு மையங்கள் உலக அளவில் தனது உன்னத நிலையையும் அதிக கட்டண ஆதிக்கத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்று ஜேபிமார்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், இந்த இறுக்கமான விதிமுறைகளால் அடுத்தகட்டச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பெரும் தரவு மையத் தேவைகள் மலேசியாவை நோக்கி நகர்வதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது.
சிங்கப்பூரில் நிலம் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுவதால், ஒவ்வொரு மெகாவாட் மின்சாரத்தையும் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த அந்நாடு திட்டமிடுகிறது. இதற்காகக் கொண்டுவரப்படவுள்ள புதிய மின்னிலக்க உள்கட்டமைப்பு மசோதாவின்கீழ், மூன்று மெகாவாட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட தரவு மையங்கள் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தித் தரநிலைகளைப் பின்பற்றுவது சட்டப்படி கட்டாயமாக்கப்படவுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு ஆண்டு வருவாயில் 10 விழுக்காடு வரை அபராதம் விதிக்கவும் மின்சாரத் திறனைக் குறைக்கவும் புதிய சட்டம் வழிவகை செய்கிறது. இதனால், சிங்கப்பூரில் தரவு மையங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து, வாடகை மற்றும் கட்டண விகிதங்கள் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கும்.
மறுபுறம், சிங்கப்பூரின் இந்த இடக் கட்டுப்பாடுகளைச் சாதகமாக்கிக் கொண்டு மலேசியாவின் தரவு மையத் திறன் மிக வேகமாக அதிகரித்து, தற்போது 13 ஜிகாவாட்டாக உருவெடுத்துள்ளது.
இது இந்தோனீசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த திறனைவிட அதிகமாகும். வெறும் மாற்றுச் சந்தையாக மட்டுமில்லாமல், குறைந்த கட்டுமானச் செலவு, மூன்று ஆண்டுகளில் மின்சார இணைப்பு வழங்கும் வசதி மற்றும் பெருநிறுவனங்களுக்கான வரிச் சலுகைகள் ஆகிய காரணங்களால் அனைத்துலகத் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதன்மைத் தெரிவாக மலேசியா மாறி வருகிறது.
சுருக்கமாகச் சொல்லப்போனால், சிங்கப்பூர் தனது தரத்தை மேம்படுத்தி வர்த்தக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வேளையில், மலேசியா அடுத்தகட்டப் பெரும் வளர்ச்சியைத் தன்வசப்படுத்தி வருகிறது.

