கெய்ரோ: எகிப்தின் சூயஸ் கால்வாயில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, அங்குக் கப்பல் போக்குவரத்து சுமுகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ‘பிடபிள்யூ லெஸ்மெஸ்’ எரிவாயுக் கப்பலும் கேமன் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட ‘பரி’ எண்ணெய்க் கப்பலும் சூயஸ் கால்வாயில் மோதியதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனமான ‘மரின் டிராஃபிக்’ கூறியது.
சம்பவம் குறித்து மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
காயங்கள் அல்லது மாசு ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது.
‘பிடபிள்யூ லெஸ்மெஸ்’ கப்பல், சூயஸ் கால்வாயில் நிறுத்தப்பட்டதாக சிங்கப்பூர் நேரப்படி காலை 5.30 மணி அளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
இருப்பினும், சூயஸ் கால்வாயில் செயலிழந்த கப்பல் ஒன்று இழுத்துச்செல்லப்படுவதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் கூறியதாக, எகிப்தின் அல்காஹிரா செய்தி நிறுவனம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் ஒரு மணியளவில், வடக்கு நோக்கியிருந்த ‘பிடபிள்யூ லெஸ்மெஸ்’ கப்பலை இரண்டு இழுவைப் படகுகள் தெற்குநோக்கி இழுத்துச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


