சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் நூறாண்டு பழைமையான சிகிச்சை முறையை மருத்துவர்கள் கையாண்டுள்ளனர்.
உடலில் உள்ள கெட்ட கிருமிகளை நல்ல கிருமிகளைக் கொண்டு அழிக்கும் ஃபேஜ் (phage) என்ற சிகிச்சை முறை மூலம் சென்ற ஆண்டு மருத்துவர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றினர்.
காப்பாற்றப்பட்ட அந்த நோயாளி ஃபேஜ் சிகிச்சை முறை மூலம் தென் கிழக்காசியாவில் உயிர் பிழைத்த முதல் நோயாளி.
20ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமாக இருந்த ஃபேஜ் சிகிச்சை மேற்கத்திய மருத்துவம் தழைத்தப்போது காலப்போக்கில் மறைந்தது.
நோய் எதிர்ப்புச் சக்தியை மீறி வளரும் கிருமிகள் உலகளவில் பெரிய சுகாதார அச்சுற்றுதலாக உருவெடுத்திருப்பதால் பழங்கால ஃபேஜ் சிகிச்சை முறை மீண்டும் உயிர்பெற்றுவருகிறது.
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் ஃபேஜ் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு கிட்டத்தட்ட 30 வயது. அவர் பிறவியிலிருந்தே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்ற ஆண்டு ஜனவரியில் இதயத்தில் செய்துகொண்ட சிக்கலான அறுவைச் சிகிச்சைக்குப் பின் நெஞ்சாங்கூட்டில் கடுமையான தொற்று ஏற்பட்டது.
ஏற்கெனவே ஐந்து சிகிச்சைகளைச் செய்திருந்த நோயாளிக்கு ஃபேஜ் முறையில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
நோயாளியின் நரம்பு வழியாக சிகிச்சை நடத்தப்பட்டது. எனவே அவர் எவ்வித அறுவைச் சிகிச்சையையும் மேற்கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் ஃபேஜ் சிகிச்சையில் உள்ள ஒரு சவால் கெட்ட கிருமிகளை அழிப்பதற்கான நல்ல கிருமிகளைக் கண்டறிவதுதான் என்றார் மூத்த மருத்துவ ஆலோசகர் ஜேஸ்மின் சங்.
தென் கிழக்காசியாவில் ஃபேஜ் சிகிச்சைமீது நாட்டம் உள்ளது. மலேசியாவிலும் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. இருப்பினும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைதான் நோயாளியிடம் ஃபேஜ் சிகிச்சை முறையை முதலாவதாகப் பயன்படுத்தியிருக்கிறது.