நார்வேயைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கட்டாபுல்ட் ஓசன் ( Katapult Ocean) 64.2 மில்லியன் வெள்ளி நிதியைச் சிங்கப்பூரில் முதலீடு செய்யவுள்ளது.
அந்த முதலீடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூருக்கு வழங்கப்படும் என்றும் அது ஆசியக் கடல் சுகாதாரத்தை மேம்படுத்தும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடல் தொடர்பான நடவடிக்கைகளில் அதிக முதலீடு செய்யும் நிறுவனமான கட்டாபுல்ட் ஓசன் இதுவரை 75க்கும் அதிகமான முதலீடுகளைச் செய்துள்ளது.
2018ஆம் ஆண்டு தனது முதலீடுகளைத் தொடங்கிய அந்த நிறுவனம் கடல் சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறது.
நிலையான கடற்பாசி உற்பத்தி, கடலில் வீசும் காற்றை மின்சக்தியாக மாற்றக்கூடிய கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு கட்டாபுல்ட் ஓசன் நிதி கொடுக்கிறது.
ஆசிய வட்டாரத்தில் கடல் சுகாதாரம் தொடர்பில் பல வாய்ப்புகள் உள்ளதாக கட்டாபுல்ட் ஓசனின் இணை இயக்குநர் மவ்ரின் பிரஸ்லி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் புதன்கிழமை (ஜூன் 11) தெரிவித்தார்.
தங்களது நிறுவனம் கரியமில குறைப்பு, கடல் மாசைக் கட்டுப்படுத்தல், நிலையான நீர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றில் அதிகக் கவனம் செலுத்துவதாகவும் திரு பிரஸ்லி கூறினார்.
அண்மைய தரவுகள் படி ஆசியக் கடல் பகுதிகளில் சீனா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகியவை கிட்டத்தட்ட 60 விழுக்காடு பிளாஸ்டிக் குப்பைகளைக் கடலில் கலக்க வழிவகுக்கின்றன.

