இடையூறுகள் இருந்தபோதிலும் சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்பாக உள்ளது: டான்

இடையூறுகள் இருந்தபோதிலும் சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்பாக உள்ளது: டான்

3 mins read
63031b37-45a7-4031-98fc-dc13c6966780
எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங்கும் ஜப்பானின் பொருளியல், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரியோசி அகாஸ்வாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். - படம்: வர்த்தக, தொழில்துறை அமைச்சு

மத்திய கிழக்கில் மோதல்கள் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்து வந்தாலும் சிங்கப்பூரின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) அன்று தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு, சிங்கப்பூரின் மின்சார உற்பத்தியில் 95 விழுக்காட்டை எரிபொருளாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இதில் பாதி சிங்கப்பூருக்கு குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும் இது பாதிக்கப்படாது என்று எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத் துறைக்குப் பொறுப்பான அமைச்சருமான டாக்டர் டான் கூறினார்.

இது சிங்கப்பூரின் எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான ‘நான்கு பாதுகாப்புத் தூண்களில்’ ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த இடையூறுகள் இருந்தபோதிலும், நமது எரிசக்தி பாதுகாப்பானது என்பதை நமது சக சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

எரிசக்தி பாதுகாப்பைக் கட்டிக்காக்க, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பாற்பட்ட மூலங்களிலிருந்து எரிவாயுவைச் சிங்கப்பூர் இறக்குமதி செய்கிறது.

இது எரிபொருள் இருப்புகளையும் பராமரிக்கிறது. மேலும் அதன் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் தேவைப்படும்போது இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதை விட்டு டீசலுக்கு மாறலாம்.

இருப்பினும், உலக அளவில் எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதாகவும், சிங்கப்பூரின் மின்சாரக் கட்டணங்களும் வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் டாக்டர் டான் மீண்டும் வலியுறுத்தினார்.

எரிசக்தியைப் பாதுகாப்பதன் மூலமும், அதிக எரிசக்தி திறன் கொண்ட சாதனங்களைக் குறைத்து பயன்படுத்துவதன் மூலமும் அதிகரிப்பை ஈடுசெய்ய சிங்கப்பூரர்கள் உதவுமாறு அவர் வலியுறுத்தினார்.

தோக்கியோவில் நடைபெற்ற உயர்மட்ட எரிசக்தி பாதுகாப்பு மன்றத்தில் கலந்துகொண்ட டாக்டர் டான் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

எரிசக்தி, நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூரும் ஜப்பானும் மார்ச் 15ஆம் தேதி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

எல்லை தாண்டிய மின்சார இறக்குமதி மற்றும் குறைந்த கார்பன் ஹைட்ரஜன், அம்மோனியா ஆகியவற்றில் இரு நாடுகளும் இன்னும் ஆழமாக ஒத்துழைக்கும். காற்றில் கரிமம் கலப்பதைத் தடுத்தல், பயன்பாடு, சேமிப்பு, அத்துடன் சிவில் அணுசக்தி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, மேம்பட்ட மின்சாரத் தொழில்நுட்ப அமைப்பைச் செயல்படுத்துவது போன்ற துறைகளிலும் அவர்கள் இணைந்து செயல்படுவார்கள்.

கொள்கைப் பரிமாற்றங்கள், வர்த்தகம், நிதி ஒத்துழைப்பை எளிதாக்குதல், தரநிலைகள், ஒழுங்குமுறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் ஆகியன இந்த ஒத்துழைப்பில் அடங்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரும் ஜப்பானும் தொழில்துறை நிறுவனங்களையும், நிதி நிறுவனங்களையும் இணைந்து பணியாற்றவும் குறைந்த கரிம எரிசக்தித் திட்டங்களில் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் டாக்டர் டானும் ஜப்பானின் பொருளியல், வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு அகாசாவா ரியோசியும் கையெழுத்திட்டனர்.

மன்றத்தில் பேசிய டாக்டர் டான், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் விலைகளை உயர்த்தி சந்தைகளைச் சீர்குலைத்தாலும், உலகளாவிய எரிசக்தித் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்றார்.

இதனால்தான் சிங்கப்பூர் உட்பட எல்லா நாடுகளுக்கும் எரிசக்தி பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது என்று டாக்டர் டான் மேலும் கூறினார்.

தற்போதைய மோதல், எரிசக்தி விலைகளையும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஓட்டங்களையும் பாதித்துள்ளது என்றும் குறிப்பாக ஆசிய வட்டாரத்தில் உள்ள பல நாடுகள் தங்கள் பெரும்பாலான எரிசக்தியை இறக்குமதி செய்வதால் அவையும் பாதிக்கப்படும் என்றும் டாக்டர் டான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்