2024/2025 நிதியாண்டில் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் $12.7 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் $12.2 பில்லியனாக இருந்தது என்று புதன்கிழமை (அக்டோபர் 8) அறிவித்தது.
இந்தத் தொகை ($12.3 பில்லியன்) சுமார் 97 விழுக்காடு சிங்கப்பூரர்களுக்குப் பரிசுத் தொகையாக ($9.45 பில்லியன்) வழங்கப்பட்டது. மேலும், பந்தய வரிகளாக ($2.28 பில்லியன்) மற்றும் சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகத்துக்கான பங்களிப்பாக ($575 மில்லியன்) கொடுக்கப்பட்டது.
மீதமுள்ள $353 மில்லியன் அதாவது 3 விழுக்காட்டுத் தொகை சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் இயக்கச் செலவுகளை ஈடுகட்டப் பயன்படுத்தப்பட்டது.
சிங்கப்பூரில் லாட்டரி, விளையாட்டுப் பந்தயம், குதிரைப் பந்தயம் ஆகியவற்றிற்கான ஒரே சட்டபூர்வ நிறுவனமாக சிங்கப்பூர் பூல்ஸ் உள்ளது. டோட்டோ, சிங்கப்பூர் ஸ்வீப், 4டி, விளையாட்டுப் பந்தயம், குதிரைப் பந்தயம் ஆகியவற்றிலிருந்து வருவாய் கிடைக்கிறது.
சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகம், சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம், சிங்கப்பூர் குதிரைப் பந்தயச் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் குழுமம், 2024/2025ஆம் நிதியாண்டில் $3.705 பில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 4 விழுக்காடு அதிகமாகும்.
இந்த வருமானத்தில் பெரும்பகுதியான $3.285 பில்லியன், பந்தயப் பிடிப்பு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளிலிருந்து வந்தது. மேலும் $139 மில்லியன் சூதாட்டக்கூட நுழைவு வரிகள் மூலம் வந்தது.
முந்தைய ஆண்டை விட இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணம், அதிக விளையாட்டு நிகழ்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பந்தய வருவாய் மூலம் கிடைத்தது என்று சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகம் அக்டோபர் 8 அன்று அதன் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 230 தொண்டு நிறுவனங்களுக்கும் சமூக முயற்சிகளுக்கும் பங்களிக்கும் வகையில், சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் $2.4 மில்லியனுக்கும் அதிகமான ஆதரவை வழங்கியுள்ளது.