சிங்கப்பூரின் சொத்துச் சந்தை முதலீட்டு விற்பனை ஆண்டு அடிப்படையில் 166.5 விழுக்காடு அதிகரித்து, 2026 முதல் காலாண்டில் $15.4 பில்லியனை எட்டியுள்ளது.
முதல் காலாண்டு விற்பனையில் இது மிக அதிகம் என்று நைட் ஃபிராங்க் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
குறைந்த வட்டி விகிதத்தால் கடன் வாங்கும் செலவு குறைந்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று அறிக்கை சுட்டியது.
வணிகத் துறையில் காலாண்டு அடிப்படையில் 2026 முதல் காலாண்டில் பரிவர்த்தனைகள் 17.2 விழுக்காடு குறைந்துள்ளபோதும் $6.3 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் முன்னணியில் உள்ளது.
இதில் ‘ஏஷியா ஸ்குவேர் டவர் 1’ (Asia Square Tower 1) விற்பனை மட்டும் கிட்டத்தட்டS$4.1 பில்லியன் மதிப்பைக் கொண்டது. எண் 78, ஷென்டன் வே $600 மில்லியன், $630 மில்லியன் விற்பனை, புக்கிட் பாஞ்சாங் பிளாசா $428 மில்லியன் விற்பனை ஆகியவையும் முக்கிய விற்பனைகளாக அமைந்தன.
தொழில்துறை முதலீடுகள் 2025 நான்காம் காலாண்டில் $1.8 பில்லியன் விற்பனையிலிருந்து 2026 முதலாம் காலாண்டில் $3.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.
குடியிருப்புப் பிரிவு விற்பனை $4.4 பில்லியனாக உள்ளது. இது அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிட 1.8 விழுக்காடு குறைவு.
அரசாங்க நில விற்பனை குடியிருப்புப் பிரிவில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக, ஹவ்காங் அவென்யூ 10, ஹவ்காங் சென்டரல் நிலப்பகுதிகள் $1.5 பில்லியனுக்கு விற்பனையாகின. டோவரில் உள்ள நிலப்பகுதி S$951 மில்லியனுக்கும் தஞ்சோங் ரூ ரோட்டில் உள்ள பதுகி $709.3 மில்லியனுக்கும் விற்பனையானது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், மத்திய கிழக்குப் போரினால் இந்த வளர்ச்சி உடனடியான அழுத்தத்தை எதிர்கொள்கிறது.
முதலீட்டுக்குச் சிங்கப்பூர் பாதுகாப்பான இடமாகத் திகழ்வது முதலீட்டாளர்களின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழல் காரணமாக சில முதலீட்டாளர்கள் தயங்கலாம் என்று நைட் ஃபிராங்க் சிங்கப்பூர் குறிப்பிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் தற்போது சற்று நிதானமாகச் செயல்பட வாய்ப்புள்ளது.
தற்போதைய நிச்சயமற்ற சூழலிலும், 2026ஆம் ஆண்டின் முழு ஆண்டு முதலீட்டு விற்பனை $30 பில்லியனாக இருக்கும் என நைட் ஃபிராங்க் கணித்துள்ளது.

