உலகின் தலைசிறந்த 5 நிதி நடுவங்களில் இடம்பிடித்தது சிங்கப்பூர்: ஆய்வாளர்கள்

உலகின் தலைசிறந்த 5 நிதி நடுவங்களில் இடம்பிடித்தது சிங்கப்பூர்: ஆய்வாளர்கள்

1 mins read
ef5f3052-36d5-4eac-b865-75bc1a939e36
வெளிநாட்டு வங்கிச் சொத்துகள், நேரடி முதலீடுகளைச் சிங்கப்பூர் தொடர்ந்து ஈர்த்துவருவதாகக் கூறப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் உலகின் முதல் ஐந்து நிதி நடுவங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ‘நியூ ஃபைனான்சியல்’ தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வங்கிச் சொத்துகள், நேரடி முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்த்ததன் மூலம் அது சாத்தியமானதாக நிறுவனம் குறிப்பிட்டது.

2015ஆம் ஆண்டு ஒன்பதாம் இடத்தில் இருந்தது சிங்கப்பூர். இப்போது சீனா, முதலீட்டு நிதி நடுவமான லக்சம்பர்க் போன்ற நாடுகளை அது பின்னுக்குத் தள்ளியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங் ஆகியவை முதல் மூன்று நிலைகளைப் பிடித்தன. நிர்வகிக்கப்படும் சொத்துகள், வெளிநாட்டு வங்கிகளின் பங்குகள், தனியார்-பொது நிதித் திரட்டல் போன்ற அனைத்துலகச் செயல்பாடுகளின் அடிப்படையில் தரநிலைகளுக்கான மதிப்பீடு அமைந்தது.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூரில் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு $6.7 டிரில்லியனுக்கு உயர்ந்தது. பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள கொள்கை மாற்றங்களால் செல்வந்தர்கள் சிலர், சொத்துகளை எங்கு வைத்திருப்பது என்று மறுபரிசீலனை செய்கின்றனர். இந்தச் சூழலில், சிங்கப்பூர் பில்லியன் கணக்கான டாலர் மூலதனத்தை ஈர்த்துள்ளது.

ஜேபிமோர்கன் சேஸ் உள்ளிட்ட வங்கிகள் சிங்கப்பூரில் வணிகத்தை விரிவுபடுத்தி வருகின்றன.

நியூ ஃபைனான்சியல் தரவரிசையின்படி, கடந்த பத்தாண்டுகளில் வேகமாக வளர்ந்துவரும் அனைத்துலக நடுவங்களில் இந்தியா, அயர்லாந்து, கனடா முதலியவையும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வங்கிநிதிஉலகம்முதலீடு