சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (எஸ்ஆர்சி) மியன்மார் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியை அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது.
கூடுதலாக $550,000 மதிப்புள்ள மனிதாபிமான உதவிப் பொருள்களை அங்கு அனுப்பி வைக்க அது எண்ணி உள்ளது.
குடும்பங்களுக்கும் பெண்களுக்கும் தேவைப்படும் சுகாதாரப் பொருள்கள், பிளாஸ்டிக் பாய்கள், கொசுதடுப்பு வலைகள், தார்பாலின்கள் போன்ற பொருள்கள் அவை.
மியன்மாரில் உள்ள சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் இந்தப் பொருள்களைத் தருவித்து விநியோகிக்கும்.
கூடுதல் ஏற்பாட்டின் மூலம், மியன்மாரில் நிலநடுக்கப் பாதிப்புக்கு உள்ளான வட்டாரங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 8,000 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகச் சங்கம் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) தெரிவித்தது.
அங்கு உள்ள மண்டாலே, சாகெய்ங் போன்ற வட்டாரங்களுக்குக் கிட்டத்தட்ட 300 தண்ணீர் வடிகட்டிகளை அது அனுப்பி உள்ளது.
அண்மையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த இரு வட்டாரங்களிலும் வசிக்கும் மக்கள் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்த அவை அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், மின்சாரமின்றித் தவிக்கும் குடும்பங்களுக்காகச் சூரிய மின்சக்தியில் இயங்கும் 900 விளக்குகளையும் சங்கம் விநியோகித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த உதவிகள் அனைத்தும் ஏறத்தாழ 80,000 மக்களுக்குப் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மியன்மார் துயர்துடைப்புப் பணிகளுக்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இதுவரை $2.7 மில்லியனுக்கும் மேற்பட்ட நன்கொடைகளைப் பொதுமக்களிடமிருந்து திரட்டி உள்ளது.
மேலும், $700,000 மதிப்புள்ள மனிதாபிமான உதவிப் பொருள்களையும் அது அங்கு அனுப்பி உள்ளது.