சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் இந்திய ஆற்றங்கரையில் தரை தட்டியது

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் இந்திய ஆற்றங்கரையில் தரை தட்டியது

2 mins read
f7389a87-f2d6-4239-813f-5342876bc739
விபத்து நேர்ந்த ஹூக்ளி நதிப் பகுதி அதன் கூர்மையான வளைவுகளுக்கும் மணல் திட்டுகளுக்கும் பெயர்பெற்றது. - படம்: திரு சுவெண்டுதாஸ், இன்ஸ்டகிராம் காணொளி
Google News Preferred Icon

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் ஆற்றங்கரையொன்றில் சிங்கப்பூர்க் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) தரை தட்டியது.

கடல் கொந்தளித்ததும் கப்பலைச் சரியாக இயக்காததும் அதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தின் காணொளி சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டிருந்தது. கொள்கலன்கள் ஏற்றப்பட்ட கப்பல் ஆற்றங்கரையை நோக்கிச் சென்று கரையில் மோதுவதை அதில் காணமுடிகிறது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘மரின்டிராஃபிக்’ தளத்தின்படி, ‘நவாட்டா பூம்’ எனும் இந்தக் கப்பல் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டது.

இந்தக் கப்பல் ஆகஸ்ட் 3ஆம் தேதி மலேசியாவில் உள்ள கிள்ளான் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, கோல்கத்தாவின் சியாமா பிரசாத் முக்கர்ஜி துறைமுகத்திற்குச் சென்றுகொண்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணி) டயமண்ட் துறைமுகத்திற்கு அருகே உள்ள கரையில் கப்பல் மோதியதாக மரின்டிராஃபிக் தரவுகளை மேற்கோள்காட்டி ஏ‌ஷியாஒன் தெரிவித்தது.

இந்தத் துறைமுகம் கோல்கத்தாவிலிருந்து தெற்கே கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

துறைமுகத்தில் இருந்து ஏறக்குறைய 50 கிலோமீட்டார் பயணம் செய்த பிறகு, டயமண்ட் துறைமுகப் பகுதியில், ஆற்றின் வளைவிலிருந்து மீண்டு திரும்ப முடியாமல் கப்பல் திணறியதாக மரின்டிராஃபிக் கூறியது.

வலுவான நீரோட்டம், கொந்தளிப்பான சூழ்நிலை, கப்பலை இயக்கும் விசையில் கோளாறு முதலியவை அதற்கு முக்கியக் காரணங்கள் என்று கண்காணிப்புத் தளம் தெரிவித்தது.

விபத்து நேர்ந்த ஹூக்ளி நதிப் பகுதி அதன் கூர்மையான வளைவுகளுக்கும் மணல் திட்டுகளுக்கும் பெயர்பெற்றது என்று த ஹான்ஸ் இந்தியா ஊடகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இந்தியாகப்பல்மோதல்விபத்துகொள்கலன்