பிரதமர் லீ சியன் லூங் கொவிட்-19 கிருமித்தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் தேதியன்று நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மே 28ஆம் தேதி குணமடைந்தார், ஆனால் இப்போது திரு லீ மீண்டும் நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
சமூக ஊடகங்கள் வழி அந்த தகவலை பிரதமர் லீ வெளியிட்டார்.
“நான் நலமாக உள்ளேன், நோய்த்தொற்று இல்லை என உறுதியாகும் வரை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார்” என்று திரு லீ குறிப்பிட்டார்.
கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 10 விழுக்காட்டினருக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படும் போக்கு உள்ளதாக மருத்துவர் கூறியதாக பிரதமர் லீ தெரிவித்தார்.
டேங்க் ரோட்டில் புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் லீ கலந்துகொள்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவருக்கு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டதால் பிரதமரால் விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை.
“அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கைக் காண ஆவலுடன் காத்திருந்தபோதும் மற்றவர்களின் பாதுகாப்புக் கருதி நான் இதனைத்த தவிர்க்க வேண்டியுள்ளது,” என்றார் பிரதமர் லீ.
“ஏற்பாட்டாளர்களிடமும் திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான குடமுழுக்கிற்காகவும் கொண்டாட்டங்களுக்காகவும் என் வாழ்த்துகள்,” என்று மேலும் சொன்னார் அவர்.