அமெரிக்காவின் வரிகளால் பாதிக்கப்படுவதை சிங்கப்பூர் தவிர்க்க முயல்கிறது: விவியன்

அமெரிக்காவின் வரிகளால் பாதிக்கப்படுவதை சிங்கப்பூர் தவிர்க்க முயல்கிறது: விவியன்

2 mins read
92e3b199-0091-4554-8f23-d483b8e4346b
ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ (வலது), சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனைச் சந்தித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டனின் சுங்கவரிக் கொள்கைக்கு சிங்கப்பூர் ஓர் ‘இலக்கு அல்ல’ என்பதை வலியுறுத்த முயற்சிப்பதாகவும், டிரம்ப் நிர்வாகம் உலகெங்கிலும் உள்ள வர்த்தகப் பங்காளிகள் மீது சுங்கவரிகளை உயர்த்தும்போது, ​​அதனால் ‘பக்கவிளைவு பாதிப்பு’ ஏற்படுவதைத் தவிர்க்க விரும்புவதாகவும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வியாழக்கிழமையன்று (ஜூலை 23) தெரிவித்தார்.

மணிலாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஒரு வார காலச் சந்திப்புகளை முடித்துக்கொண்ட பிறகு, சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசிய டாக்டர் விவியன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவுடனான இருதரப்பு சந்திப்பின்போது இந்தக் கருத்தை வலியுறுத்தியதாகக் கூறினார்.

“அமெரிக்க நிர்வாகம், அதன் சொந்த உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக, சுங்கவரி வருவாயை உயர்த்த வேண்டும் என்பது உங்களுக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும். எனவே, எனது விவாதத்தின் விவரங்களை நான் உங்களுக்குத் தரப்போவதில்லை. ஆனால் சிங்கப்பூர் அமெரிக்காவின் இலக்கு அல்ல, துளியும் இல்லை என்ற கருத்தை வலியுறுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்,” என்று கூறிய அவர், தங்களுக்குள் ஒரு ‘நல்ல, வெளிப்படையான, உண்மையான விவாதம்’ நடந்ததாகவும் மேலும் கூறினார்.

உண்மையில், அமெரிக்கா சிங்கப்பூருடனான வர்த்தகத்தில் உபரியைக் கொண்டுள்ளது. அந்த உபரி அதிகரித்து வருகிறது என்ற கருத்தை தாம் ‘மிகத் திட்டவட்டமாக’ முன்வைத்ததாக அமைச்சர் விவியன் மேலும் கூறினார்.

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட நாடுகளுக்கு எதிராக வரிகளை விதிக்க அதிகாரம் அளிக்கும் பிரிவு 301ன்கீழ், காலாவதியாகும் நடவடிக்கைக்குப் பதிலாக மேலும் இலக்கு வைக்கப்பட்ட வரிகளை விதிக்க உத்தேசித்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் சமிக்ஞை செய்துள்ளது.

சிங்கப்பூர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், விநியோகச் சங்கிலிகளில் கட்டாய உழைப்பைத் தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் அமெரிக்காவிடம் கூறியுள்ளது.

வாஷிங்டனுடனான சிங்கப்பூரின் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால், அமெரிக்க வரிகள் மீதான நிச்சயமற்ற தன்மையானது, ஆசியான் அமைப்பு தனது பொருளியல் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தவும், அதன் மீள்திறனை பலப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்தியுள்ளது என்று டாக்டர் விவியன் கூறினார்.

2027ஆம் ஆண்டில் ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது சிங்கப்பூரின் முன்னுரிமைகள் குறித்து கேட்கப்பட்டபோது, ​​ஆசியானின் அடிப்படை முக்கியத்துவத்தைப் பேணுதல், மீள்திறனை உருவாக்குதல், வட்டார ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய மூன்று பரந்த கருப்பொருள்களை அவர் சுட்டிக்காட்டினார்.

வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே போட்டி அதிகரித்து வந்தபோதிலும், இந்த வாரக் கூட்டங்களை இரு வல்லரசுகளும் ‘கவனமாகவும், நிதானமாகவும், ஆக்கப்பூர்வமாகவும்’ அணுகியதாக அமைச்சர் விவியன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
வெளியுறவு அமைச்சர்ஆசியான்பாதிப்பு