சிங்கப்பூரில் இம்மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாள்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
காலை வேளையிலும் பிற்பகல் நேரத்திலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சிங்கப்பூர் வானிலை நிலையம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) தெரிவித்தது.
இம்மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெய்யக்கூடிய மழை சராசரியைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
பெரும்பாலான நாள்களில் அதிகபட்ச அன்றாட வெப்பநிலை 33லிருந்து 34 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கும். சில நாள்கள் அது 34 டிகிரி செல்சியசுக்கு மேல் உயரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சில நாள்கள் இரவு நேரங்கள் வெப்பமாகவும் காற்றில் ஈரப்பதம் இல்லாமல் வெப்பநிலையில் 34 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவாகலாம். குறிப்பாகத் தீவின் தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இது உணரப்படும்.
இதற்கிடையே, ஜூன் 6ஆம் தேதி புலாவ் உபினில் வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியசாகப் பதிவானது. அது இம்மாதத்தில் பதிவான ஆக அதிகமான வெப்பநிலை.
அதேபோல் ஜூன் 12ஆம் தேதி நியூட்டனில் பெய்த கனமழையின் போது வெப்பநிலை 20.1 டிகிரி செல்சியசாகப் பதிவானது. இது 2026ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலையாகும்.

