இஸ்ரேலுக்கும் லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை சிங்கப்பூர் வரவேற்றுள்ளது.
இது, அவ்வட்டாரத்தின் நிலைத்தன்மையை நிலைநாட்டுவதற்கான முதல் படி என்று நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
“அனைத்து தரப்பினரும் உடன்படிக்கையின் விதிமுறைகளை மதித்து செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றது அது.
இந்த நிலையில் காஸாவிலும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது.
“பிணைக்கைதிகள் பாதுகாப்பாக, நிபந்தனையில்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும். காஸாவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியமான மனிதாபிமான உதவிகளை அவசரமாக, பாதுகாப்பாக, தடையின்றி வழங்க அனுமதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று சிங்கப்பூர் மேலும் கூறியது.