நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) அண்மைய ஆய்வு அறிக்கை நம்பகத்தன்மையுடன் செயல்பட்டுள்ளது என்றும், அதன் பரிந்துரைகளை அரசாங்கம் கவனமாக ஆராய்ந்து திட்டங்களை உருவாக்கும் என்றும் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் குறித்துக் கடந்த மே மாதம் வெளியான ‘எஃப்ஏடிஎஃப்’ அறிக்கை பற்றி பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லூயிஸ் சுவா (செங்காங் குழுத்தொகுதி), சில்வியா லிம் (அல்ஜுனிட் குழுத்தொகுதி) ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோது திரு முரளி இவ்வாறு கூறினார்.
உலகளாவிய நிதிக்குற்றக் கண்காணிப்பு அமைப்பான ‘எஃப்ஏடிஎஃப்’, இரண்டு துறைகளில் சிங்கப்பூர் பகுதியளவு மட்டுமே இணங்கி நடப்பதாக மதிப்பிட்டுள்ளது.
பயனாளி உரிமை, அதாவது ஒரு நிறுவனத்தின் இறுதி உரிமையாளர் குறித்துப் பேசுகையில், சட்டபூர்வ நபர்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சிங்கப்பூர் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக எஃப்ஏடிஎஃப் ஏற்றுக்கொண்டுள்ளதாக திரு முரளி பிள்ளை விளக்கினார்.
“எஃப்ஏடிஎஃப்’ பரிந்துரைகளைக் கவனமாக ஆராய்வோம். சிங்கப்பூருக்கு ஏற்ப கட்டமைப்பை வலுப்படுத்தி மேலும் மேம்பாடுகள் தேவையா என்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்,” என்று திரு முரளி பிள்ளை கூறினார்.

