எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளைத் தயாரித்து கடத்திவந்த கும்பலுக்கு எதிரான நடவடிக்கையின்போது, சிங்கப்பூரர் ஒருவரை வியட்னாமின் ஹோ சி மின் நகரக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
ஓ ஜியாங் ஃபோங் என்ற அந்த ஆடவர் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்தவர் எனக் கூறப்பட்டது.
மெல்வின் டான் ஜுன்ஜீ என்ற சிங்கப்பூரரும் ஹூ ஜியா ஹோ என்ற மலேசியரும் அந்தப் போதைப்பொருள் கும்பலை வழிநடத்தி வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஓ ஜியாங் ஃபோங் மின்சிகரெட்டுகளில் நிரப்புவதற்கான எட்டோமிடேட் திரவத்தை விநியோகித்ததாகக் கூறப்பட்டது.
அம்மூவரும் ஜூலை 17ஆம் தேதி பிடிபட்டதாக ‘வாய்ஸ் ஆஃப் வியட்னாம்’ ஊடகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் சட்டவிரோதக் கும்பல் தொடர்பாகக் காவல்துறையினர் இதுவரை 76 பேரிடம் விசாரணை நடத்தி, 65 பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு சிங்கப்பூரர்களும் அடங்குவர்.
முன்னதாக, ஜூலை 16ஆம் தேதி வியட்னாம் சென்ற ஓ, ஜூலை 18ஆம் தேதி சிங்கப்பூர் திரும்ப வேண்டியவர். ஆனால், அவர் மாயமானதை அடுத்து, அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இணையத்தில் உதவி கோரியிருந்தனர். ஜூலை 17ஆம் தேதியன்று ஓ வியட்னாமிற்குள் நுழைந்ததை ஹோ சி மின் நகரிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகம் உறுதிப்படுத்தியது.

