ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சிங்கப்பூர் ஆடவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
27 வயதான இங் ஜிங் காய் வேண்டுமென்றே 48 வயது சைக்கிளோட்டி மீது காரைக் கொண்டு மோதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங் கிட்டத்தட்ட 30 மீட்டர் அந்த சைக்கிளோட்டியை கார் மூலம் இழுத்துச்சென்றதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் மே 24ஆம் தேதி பெர்த்தில் நடந்தது.
இங்கிற்கும் மாண்ட நபருக்கும் சொத்து தொடர்பான பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. மே 24ஆம் தேதி பிற்பகல் 1.45 மணி வாக்கில் இங் சைக்கிளோட்டி மீது காரைக் கொண்டு மோதியுள்ளார்.
படுகாயமடைந்த அந்த சைக்கிளோட்டி ராயல் பெர்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் பலத்த காயங்கள் காரணமாக அவர் மருத்துவமனையில் மாண்டார்.
அதன்பின்னர் இங்கிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவர் மீது கொலை குற்றச்சாட்டை பதிவுசெய்தனர்.
இங் சைக்கிளோட்டி மீது மோதியபோது அவருடன் காரில் சிலர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் இங்கின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இங் மீது ஜூன் 26ஆம் தேதி நீதிமன்ற விசாரணை நடத்தப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இங் பெர்த் நகரில் உள்ள இண்டிகோ கல்வி குழுமத்தில் 2022ஆம் ஆண்டு முதல் கணக்கு ஆசிரியராக இருந்ததாக ‘லிங்க்ட்இன்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

