மகளைப் பிரிந்ததுமுதல் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் நீண்ட பொழுதாகத் தோன்றுவதாக அவரைப் பிரிந்து வாடும் தந்தை அவரது இன்ஸ்டகிராம் பதிவின் தலைப்பில் தெரிவித்துள்ளார்.
தமது மகள் சிட்டி ஆய்ஷா சஹாட் செரேகார் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கம்போடியத் தலைநகர் நொம்பென் சென்றதாகவும் அன்றுமுதல் அவரைக் குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அவரது தந்தை சமூக ஊடகத்தில் உதவி கோரி பதிவிட்டுள்ளார்.
அந்த 20 வயதான நன்யாங் தொழில்நுட்பக் கல்லூரி மாணவியின் தந்தை சஹாட் செரேகார், ஒரு சொத்து முகவராகப் பணியாற்றுகிறார்.
இன்ஸ்டகிராமில் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ள அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் இதுவரையில் அவருக்கு உதவியோருக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
சிங்கப்பூர், கம்போடியா ஆகிய இருநாட்டு அதிகாரிகளிடமும் அவர் அணுக்கமானத் தொடர்பில் உள்ளார். அவர்களிடம் உடனடியாக மகளைத் தேடிக்கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொண்ட அவர், மகளைப் பிரிந்துள்ள ஒவ்வொரு மணி நேரமும் அவள் வீடு திரும்பும் வாய்ப்பைக் கடினமாக்குவதாக அவரது குடும்பம் உணர்வதாகக் குறிப்பிட்டார்.
“ஒரு தந்தையாக நான் உங்களைக் கெஞ்சுகிறேன், எனது மகள் பாதுகாப்பாக வீடு திரும்பவேண்டும்,” என்று பதிவிட்ட அவர் அந்த உதவிக் கோரிக்கையை முடிந்த அளவு மக்களிடம் பகிரும்படி கேட்டுக்கொண்டார்.
சிறிய தகவலாக இருந்தாலும் தம்மிடமோ, சிங்கப்பூர் காவல்துறையிடமோ தெரிவிக்குமாறு அவர் தெரிவித்தார்.
எப்படியாவது யாரேனும் தகவல் அறிந்தவரிடம் அவரது இந்தப்பதிவு எட்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலை வரையிலும் மகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. வெளியுறவு அமைச்சிடமிருந்தும் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.

