சிலிகி சாலையில் நடந்த தகராறின்போது, 40 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியைக் காட்டி மிரட்டிய சந்தேகத்தின்பேரில் 21 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரும்புக் கம்பி போன்ற ஒரு பொருளைப் பிடித்திருந்த ஆடவர் சம்பந்தப்பட்ட தகராறு குறித்து ஜூலை 27ஆம் தேதி அதிகாலை 4.48 மணி அளவில் புகார் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் காவல்துறை கூறியது.
அந்த ஆடவர் தனது சட்டையின் பின்னால் 40 சென்டிமீட்டர் நீளமான கத்தியை மறைத்துக்கொண்டு மூன்று நபர்களுடன் தகராறில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அப்போது, அவர் கத்தியை வெளியே எடுத்து அவர்களை மிரட்டிவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
காவல்துறைக் கண்காணிப்புக் கருவிகளின் உதவியோடு, தீவிர விசாரணைகள் மூலம் அந்த நபரின் அடையாளத்தை உறுதிசெய்த பிறகு, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
அவர் தூக்கி எறிந்த கத்தி, பின்னர் மிடில் சாலையில் கண்டெடுக்கப்பட்டது.
பொது இடங்களில் ஆபத்தான ஆயுதங்களை ஏந்திச் சென்றதாக அந்த ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

