மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ப் பதற்றத்தால் சிங்கப்பூரில் தங்கத்தை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிங்கப்பூரில் உள்ள நகை வர்த்தகர்களும் அத்திமானத் தங்கத்தை வாங்கி வருகின்றனர்.
உள்ளூர் வாசிகள் பலர் தங்கக் கட்டிகள், தங்க நாணயங்களை எப்போதும் இல்லாத அளவில் வாங்குவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதேபோல் வெள்ளியை வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது.
சூழ்நிலையைப் பயன்படுத்தி சிலர் தங்களது பழைய தங்க நகையை விற்று புதிய தங்கத்தை வாங்குகின்றனர்.
நடுத்தர வயது மக்கள் தொடர்ந்து தங்கத்தை வாங்கினாலும் இப்போது இளையர்கள் பலரும் தங்கத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களுடன் தற்போதைய ஆண்டு ஒப்பிடுகையில் வியாபாரம் 100 விழுக்காடு அதிகரித்துள்ளதாக இன்டிகோ பிரெசியஸ் மெட்டல்ஸ் (Indigo Precious Metals) உரிமையாளர் டேவிட் மிட்ச்செல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“கடந்த சில மாதங்களாக நகைகளை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள். நகைகளை விற்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது,” என்றார் அவர்.
தமது கடைக்கான தங்கத்தை சுவிட்சர்லாந்து, பிரிட்டன், ஹாங்காங் ஆகிய பகுதிகளிலிருந்து அவர் வாங்குவதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“உலக நிலவரம் தற்போது சரியில்லை. மத்திய வங்கிகள் வட்டிகளைக் குறைக்கலாம். இதனால் தங்கத்தின் விலை அதிகமாகலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி ஓர் அவுன்ஸ் தங்கத்தின விலை US$5,589.38 ஆக இருந்தது. ஆனால் அடுத்த சில வாரங்களில் அது திடீரென US$4,800க்கு குறைந்தது. தற்போது ஓர் அவுன்ஸ் தங்கத்தின விலை US$4,990க்கும் US$5,045க்கும் இடையில் வர்த்தகமாகுகிறது.

