குலாய்: ஜோகூரில் உள்ள குலாய் அருகே வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதி 56 வயதுச் சிங்கப்பூர் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் பகுதியில் ஆகஸ்ட் 2ஆம் தேதி பிற்பகல் 2.05 மணியளவில் அந்த விபத்து நேர்ந்தது குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் குலாய் காவல் துணை ஆணையர் டான் செங் லீ தெரிவித்தார்.
56 வயதான அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, வலது தடத்தில் 32 வயது சிங்கப்பூர்ப் பெண் ஓட்டிச் சென்ற வாகனத்தின் பின்புறத்தில் மோதியதாகத் திரு டான் மேலும் கூறினார்.
சம்பவம் நேர்ந்தபோது அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து மெதுவாகச் சென்றுகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
“மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் குலாய் மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்,” என்றார் திரு டான்.
மேலும், இந்த விபத்தில் 39 வயது மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், 57 வயது நபருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் டான் தெரிவித்தார். இருவருக்கும் குலாய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

