மலேசிய விரைவுச்சாலை விபத்தில் சிங்கப்பூர் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

மலேசிய விரைவுச்சாலை விபத்தில் சிங்கப்பூர் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

1 mins read
7ace12ab-df3b-4d21-b47a-318e1ef8ddf6
மாண்டவர் 20 வயது லுத்ஃபி அடிப் யூசோஃப் என அடையாளம் காணப்பட்டார். - படம்: மலேசியக் காவல்துறை

பத்து பகாட்: மலேசியாவின் வடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) நேர்ந்த விபத்தில் சிங்கப்பூர் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

ஜோகூரின் பத்து பகாட் நகருக்கு அருகே அதிகாலை 5 மணியளவில் அவ்விபத்து நேர்ந்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.

மாண்டவர் 20 வயது லுத்ஃபி அடிப் யூசோஃப் என அடையாளம் காணப்பட்டார். தலையில் கடுமையாகக் காயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

போர்ட் டிக்சன் நகரை நோக்கி யூசோஃப் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழியில் அவரது மோட்டார்சைக்கிளில் பழுது ஏற்பட்டதால் அவர் அவசரகாலத் தடத்தில் தமது வாகனத்தை நிறுத்த வேண்டியதாயிற்று என்று மலேசியக் காவல்துறை தெரிவித்தது.

அப்போது, அதே திசையில் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அவரது மோட்டார்சைக்கிள்மீது மோதியதாகக் காவல்துறை கூறியது.

இவ்விபத்தில் லாரியின் 45 வயது ஓட்டுநர் காயமடையவில்லை.

விபத்து குறித்துக் காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மலேசியாமோட்டார்சைக்கிள்விபத்துஉயிரிழப்பு