சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் புதிய ஆலைகளைத் திறப்பது அல்லது விரிவடையச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இதனால் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பிலிருந்து விலக்கு கிடைக்குமா என்று அவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
திரு டிரம்ப், வெளிநாடுகளில் காப்புரிமை பெற்று தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு 100 விழுக்காடு இறக்குமதி வரி விதித்துள்ளார். மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் ஆலைகளைத் திறந்தால் வரி இல்லை என்றார் அவர்.
புதிய வரி அக்டோபர் மாதத்தில் நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வர்த்தகத் தொழில் துணை அமைச்சர் கான் சியாவ் ஹூவாங் வரிவிதிப்பு குறித்துப் பேசினார்.
“மருந்துகளுக்கான வரி இன்னும் அமல்படுத்தப்படவில்லை, நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அமெரிக்காவில் ஆலைகள் திறக்கப்பட்ட பிறகு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு கிடைக்குமா என்பது குறித்துத் தெளிவான விவரங்கள் இல்லை,” என்று திருவாட்டி கான் கூறினார்.
“சிங்கப்பூர், அமெரிக்க அரசாங்கத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் மருந்துகளுக்கான வரியைக் குறைத்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.