போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, புதிய சாதனையை நிகழ்த்த 24 ஆட்டங்களும் கிட்டத்தட்ட 2,000 நிமிடங்களும் தேவைப்பட்டன.
ஆறு உலகக் கிண்ணங்களில் கோல் அடித்த முதல் விளையாட்டாளர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.
ரொனால்டோ சாதனை நிகழ்த்திய இடத்திலிருந்து சில மீட்டர்கள் உயரத்தில் கையில் ஒளிப்பதிவுக் கருவியுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த விளையாட்டு நிழற்படக் கலைஞர் எட்மண்ட் வோங்கும் தமது கனவை நனவாக்கிக் கொண்டிருந்தார்.
ரொனால்டோவை வைத்தகண் வாங்காமல் தொடர்ந்தார் வோங். ரொனால்டோ, இவ்வாண்டு உலகக் கிண்ணத்தில் முதல் கோல் போட்ட தருணத்தையும் அதைத் தொடர்ந்து அவர் அணியின் சக வீரர்களை நோக்கி ஓடிச்சென்று கொண்டாடிய துடிப்பான காட்சியையும் துல்லியமாகப் படம்பிடித்தார் வோங்.
ரொனால்டோவை அவருடைய அணியினர் கட்டிப்பிடித்துக் கொண்டாடுவதும் போர்ச்சுகல் அணியின் சிவப்பு நிறச் சீருடைக்கு நடுவே ரொனால்டோவின் மகிழ்ச்சியான முகம் ஒளிவீசுவதும் நிழற்படத்தில் தெளிவாகத் தெரிகிறது.
“இது சிறந்த கதையைச் சொல்கிறது,” என்றார் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (FIFA) அங்கீகாரம் பெற்றவரான வோங்.
சக வீரர்களின் ஆதரவையும், அவர்கள் ரொனால்டோமீது வைத்துள்ள நம்பிக்கையையும் நிழற்படம் காட்டுவதாக அவர் சொன்னார்.

