ரவாங்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் விழுந்த சிங்கப்பூர் மாது மீட்கப்பட்டுள்ளார்.
அந்தச் சம்பவம் ரவாங் நகருக்கு அருகில் உள்ள காஞ்சிங் சுற்றுச்சூழல் வனப் பூங்காவில் சனிக்கிழமை (ஜூன் 6) நிகழ்ந்ததாக ‘சின்சியூ’ ஊடகம் கூறியது.
மலை மீது இருக்கும் அந்தப் பூங்காவிற்குச் சென்றிருந்த மாது, கால் இடறி நீர்வீழ்ச்சியில் விழுந்துவிட்டார். அது பற்றிய தகவல் கிடைத்ததும் உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தூக்குப் படுக்கையுடன் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றதாக அந்தப் படையின் தலைவர் ஸைதி கூறினார்.
மாதுவைப் பாதுகாப்புடன் மீட்க குழு ஒன்று உடனடியாக அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
காயமடைந்த மாதுவை மலையிலிருந்து கீழே இறக்குவதற்காக அவர்கள் நீர்வீழ்ச்சி பகுதிக்குள் நுழைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பின்னர், பரிசோதிப்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ ஊழியர்களிடம் மாது ஒப்படைக்கப்பட்டதாக திரு ஜைதி கூறினார்.
மாதுவின் உடலில் ஏற்பட்ட காயம் பற்றிய விவரம் தெரியவில்லை என்றார் அவர்.
நீர்வீழ்ச்சியிலும் ஆற்றுப் பகுதிகளிலும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும் எனவும் அந்தந்தப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகளைப் பின்பற்றவேண்டும் என்றும் திரு ஜைதி தெரிவித்துள்ளார்.

