மலேசியாவிலுள்ள ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் கெந்திங் சூதாட்டக்கூடத்தில் சிங்கப்பூர்ப் பெண் ஒருவரை அதிர்ஷ்ட தேவதை தழுவ, அவருக்கு 31.9 மில்லியன் ரிங்கிட் (S$10.3 மில்லியன்) பரிசுத்தொகை கிட்டியது.
கடந்த வியாழக்கிழமை (மே 21) பிற்பகல் 2 மணியளவில் அந்தச் சூதாட்டக்கூடத்தில் ‘டிரேகன் லிங்க்’ இயந்திரத்தில் பந்தயம் கட்டி விளையாடியபோது அவருக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாகக் கிடைத்தது என்று ‘சைனா பிரஸ்’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அந்தச் சூதாட்டக்கூட வரலாற்றிலேயே, காசு போடுவதால் இயங்கும் ‘ஸ்லாட்’ இயந்திரத்தில் இதற்குமுன் இவ்வளவு பெரிய தொகை பரிசாக விழுந்ததில்லை என்று அந்த மலேசிய ஊடகச் செய்தி குறிப்பிட்டது.
அப்பெண் அவ்வியந்திரத்தில் பந்தயத்தொகையாக 40 ரிங்கிட் மட்டுமே செலுத்தினார் என்று ரெக்ஸ் சாங் என்பவரின் ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.
அப்பதிவைக் கண்ட இணையவாசிகள் பெரிதும் வியப்பில் ஆழ்ந்து, அந்த அதிர்ஷ்டக்காரப் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த ‘ஸ்லாட்’ இயந்திரத்தில் கடந்த சில காலமாகவே பரிசுத்தொகை சேகரிக்கப்பட்டு வந்துள்ளது. சென்ற ஆண்டே பந்தயப் பரிசுத்தொகை 12 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததால், பந்தயம் கட்டுவோரிடையே அது புகழ்பெற்ற ஒன்றாக விளங்கியது.
அந்த இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 880 ரிங்கிட்வரை பந்தயம் கட்டலாம் எனக் கூறப்பட்டது.

