அனைத்துலக அளவில் சிங்கப்பூரின் தற்போதைய நிலை, இந்த அறுபது ஆண்டுகாலப் பயணத்தின் முக்கியச் சாதனை என்று கூறியுள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங். அதனை அடைவதற்கு சிறந்த ஆட்சி நிர்வாகமும், ஒற்றுமையான, உழைக்கும் மக்களுமே காரணமாக அமைந்ததாகவும் சொன்னார்.
தற்போது சிங்கப்பூரின் கடப்பிதழ் ஆக வலுவானதாகப் பார்க்கப்படுவதைக் குறிப்பிட்டதுடன், 1970, 80களில் வெகுசிலருக்கே வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைத்ததாக அவர் சொன்னார்.
தமது தேசிய தினப் பேரணி உரையில் ஆங்காங்கே தமது வாழ்வில் நடத்த பல்வேறு நினைவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் பிரதமர் வோங்.
“பள்ளி விடுமுறைக் காலங்களில் எனது தந்தை எங்களை வெளியில் அழைத்துச் செல்வார். நான் அப்போது மேற்கொண்ட வெகுதூரப் பயணமே மலேசியா வரைதான். எப்போதாவது சாங்கி விமான நிலையம் செல்வோம். விமானம் ஏறுவதற்கு அல்ல. உணவருந்துவதற்கு,” என்று பகிர்ந்தார்.
“விமானம் ஏறுவதையும் தரையிறங்குவதயும் காண்பதே அப்போது ஆக மகிழ்ச்சி தரும்,” என்று கூறிய அவர் என்றும் ஒரே முனையம் இருந்த விமான நிலையத்தில் தற்போது ஐந்து முனையங்கள் இருப்பதையும் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் பயணங்களைச் சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கிக் காத்திருப்பதையும் சுட்டினார்.