சிங்கப்பூர் ரயில்களின் நம்பகத்தன்மையின் ஒட்டுமொத்த விகிதம் ஜூலை மாதத்தில் மேம்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ரயில் கட்டமைப்பில் ஏற்பட்ட தாமதங்கள் இதுவரை இல்லாத வகையில் 30 நிமிடங்களுக்குமேல் நீடிக்கவில்லை என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) ஆணையம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. தொடர்ச்சியாகக் கடந்த ஒன்பது மாதங்களாக அந்த நிலை நீடித்தது.
இதற்குமுன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரயில் கட்டமைப்பில் ஏற்பட்ட தாமதம் அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் இவ்வாண்டு ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஐந்து நிமிடங்களுக்குமேல் ஏற்பட்ட தாமங்களுக்கு இடையே ரயில்கள் ஏறக்குறைய 2.37 மில்லியன் கிலோமீட்டர்வரை பயணம் செய்தன.
ஒட்டுமொத்தமாக ஐந்து பாதைகளிலும் உள்ள ரயில்கள் நேரத்துக்கு வந்த விகிதம், ஜூலை மாதத்தில் 99.29 விழுக்காட்டுக்குக் குறைந்தது. அதற்கு முந்தைய மாதம் அது 99.32 விழுக்காடாக இருந்தது.
எஸ்எம்ஆர்டியின் வட்டப் பாதையின் ரயில்களின் நம்பகத்தன்மை ஜூலை மாதம் மேம்பட்டிருந்தது. ஜூலை மாதத்தில் வட்டப் பாதையின் ரயில்கள் தாமதங்களுக்கு இடையே கிட்டத்தட்ட 2.45 மில்லியன் கிலோமீட்டர்வரை பயணம் செய்தன.
அதேபோல எஸ்பிஎஸ் டிரான்சிட் நிர்வகிக்கும் வடக்கு-கிழக்குப் பாதையின் ரயில்களே ஆக நம்பகத்தன்மைமிக்க சேவையை வழங்கின. தாமதம் ஏற்படுவதற்குமுன் வடக்கு-கிழக்கு ரயில்கள் சராசரியாக 4.47 மில்லியன் கிலோமீட்டர்வரை பயணம் செய்தன. அதற்கு முந்தைய மாதம் அவை 4.46 மில்லியன் கிலோமீட்டர்வரை சென்றன.
பிற ரயில் பாதைகளின் நம்பகத்தன்மையிலும் பெரியளவில் மாற்றம் இல்லை.
டௌன்டவுன் பாதையில் சேவை வழங்கிய ரயில்கள் தாமதங்களுக்கு இடையில் சராசரியாக 4.2 மில்லியன் கிலோமீட்டரும் கிழக்கு-மேற்கு ரயில் பாதை ரயில்கள் 2.02 மில்லியன் கிலோமீட்டரும் பயணம் செய்தன.
வடக்கு-தெற்கு ரயில்கள் நம்பகத்தன்மை குறைந்த கட்டமைப்பாக நீடிக்கிறது. ஜூலை மாதத்தில் ஒவ்வொரு தாமதத்துக்கும் இடையே ரயில்கள் கிட்டத்தட்ட 1.65 மில்லியன் கிலோமீட்டர்வரை பயணம் செய்தன.
ரயில்கள் அனைத்தும் கடந்த நான்கு மாதங்களாகச் சீராய் இயங்குவதற்குப் போக்குவரத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பும் ரயில்களை இயக்குவோரின் முயற்சியும் காரணம் என்று ஆணையம் சுட்டியது.


